உக்ரைன் போரை நிறுத்த மலை உச்சியில் அமர்ந்து பூஜை செய்த மடாதிபதி! என்ன நடந்தது?
உக்ரைன் போரை நிறுத்த மலை உச்சியில் கடும் வெய்யிலில் அமர்ந்து மடாதிபதி பூஜை செய்ததால் திருப்பரங்குன்றம் மலையில் பரபரப்பு ஏற்பட்டது.
உக்ரைன்மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்தி அங்கு அமைதி நிலவ வேண்டி புவனேஸ்வரி மடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது அமர்ந்து மந்திர பூஜை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையிலுள்ள யோகமாயா ஸ்ரீ புவனேஸ்வரி பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மடாதிபதி பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு காலையில் சென்றவர், உக்கிரமான வெயிலைப் பொருட்படுத்தாது சுடும் பாறையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.
உக்ரைன் நாட்டில் நடைபெறும் யுத்தம் நிறுத்தப்படவும் சமாதானம் உண்டாகவும் உயிர்சேதம் ஏற்படாமல் இருக்கவும், உலக மக்களின் அமைதிக்காகவும் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
இதுகுறித்து அவருடைய பக்தர்களிடம் பேசியபோது, "உக்ரைன் போர் முடிவுக்கு வந்து உலகம் அமைதியாக வேண்டும் என்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நீர்நிலைகள் நிறையவும், விவசாயம் சிறந்து விளங்கவும், கொரோனா போன்ற கொடிய நோய்களின் தாக்கத்தில் இருந்து நம் நாடு முழுமையாக விடுபடவும் பூஜித்தார்.
இந்த பூஜையை செய்வதற்கு முன்பு, வராகி அம்பாளை மனதில் நினைத்துக் கடுமையான விரதம் இருந்தார். மேலும், மஞ்சள் நீரில் நீராடி, விபூதி ஸ்நானம் செய்து வெயிலில் அமர்ந்து இரண்டு மணி நேரம் வராகி அம்பாளின் மூல மந்திரத்தை ருத்ராட்ச மாலையை வைத்துக்கொண்டு ஜெபித்து பக்தர்களுக்காக வேண்டி பூஜை செய்தார்" என்றனர்.
திருப்பரங்குன்றம் மல மீது மடாதிபதி ஒருவர் உலக மக்களுக்காகத் தன்னையே வருத்திக்கொண்டு பூஜை செய்ததை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பார்த்தனர்.