இரட்டை சிசுவுடன் 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு; பரோட்டா சாப்பிட்டதுதான் காரணமா?
விருதுநகரில் 5 மாத கர்ப்பிணிப் பெண் திடீரென வாந்தி மயக்கத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இரவில் பரோட்டா சாப்பிட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் சங்கன். கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி அனந்தாயி 5 மாதம் கருவுற்றிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு சங்கன், அருகில் உள்ள ஒரு பரோட்டா கடையில் மனைவி அனந்தாயிக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்ததாகவும், அந்த பரோட்டாவை வீட்டில் இருந்த கருவாட்டுக் குழம்புடன் சேர்த்துச் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், சிறிது நேரத்தில் அனந்தாயிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதையடுத்து உடனடியாக அனந்தாயியை அவரின் உறவினர்கள், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அனந்தாயின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அனந்தாயியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்ததாகத் தெரிய வருகிறது.
பரோட்டா சாப்பிட்டதால் ஏற்பட்ட ஃபுட் பாயிஸனிங்கால் (Food poisoning) அனந்தாயி உயிரிழந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என, அருப்புக்கோட்டை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்றில் இரண்டு சிசுக்களுடன் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.