தமிழகம் உட்பட 3 மாநிலங்களுக்கு ரூ.50,000 அபராதம் - உச்ச நீதிமன்றம் அதிரடி!
தமிழகம் உட்பட 3 மாநிலங்களுக்கு ரூ.50,000 அபராதம் - உச்ச நீதிமன்றம் அதிரடி!
மதிய உணவுத் திட்டம் பள்ளிகளில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை இணையதளத்தின் வாயிலாக கண்காணிக்கத் தவறிய மாநிலங்களுக்கு, அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். தன்னார்வத் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், கடந்த 2013-ம் ஆண்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, மதிய உணவுத் திட்டம் தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல்செய்து. அதில், `அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தை மாநில அரசுகள் கண்காணிக்கத் தவறிவிடுகின்றன. இதனால், உணவுகளில் நச்சுத்தன்மை கலந்துவிடுகிறது. குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், `உணவுகள் சுத்தமாக சமைக்கப்படுகிறதா என்று கண்காணிக்க தேசிய, மாநில அளவில் இரண்டு குழுக்களை அமைக்க வேண்டும்; மாநில அரசுகள் இணையதளம் வாயிலாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை மீண்டும் நீதிபதிகள் மதன் பி லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரது அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசுகள் பின்பற்றவில்லை' என்றுகூறி, தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர். அதோடு, தமிழகம், ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்தத் தொகையை, 4 வாரத்துக்குள் உச்ச நீதிமன்றப் பணிகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, புதுச்சேரி, அருணாசலப்பிரதேசம், நாகர்ஹவேலி, தாதர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை. இருப்பினும், இவைகளுக்கு அபராதம் விதிக்கவில்லை.