தலைமைப்பொறுப்புக்குத் தகுதி இல்லாதவர்களா பெண்கள்? உயர் கல்வித்துறையில் பாலின சமத்துவமின்மை!
இந்தியாவில் வெறும் 7 சதவிகித பெண்கள் மட்டுமே துணைவேந்தர் பதவியில் உள்ளனர். இந்த 7 சதவிகிதத்தில் பாதி பேர், பெண்கள் மட்டும் பயிலும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிகின்றனர். தலைமைப் பொறுப்புகளுக்கு வர பெண்களுக்குத் தகுதியில்லையா அல்லது அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவா?
பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்களே தலைமைப் பொறுப்புகளில் இருப்பார்கள். விரல்விட்டு எண்ணும்படியான எண்ணிக்கையிலேயே பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அப்படியானால் தலைமைப் பொறுப்புகளுக்கு வர பெண்களுக்குத் தகுதியில்லையா அல்லது அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறதுதானே....
இந்தியாவின் உயர்கல்வித்துறையிலும் பாலின சமத்துவமின்மை நிலவுகிறது. டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வேர்ல்டு யுனிவர்சிட்டி ரேங்கிங் 2021-ன்படி , உலகளவில் உயர்கல்விக்கான 200 நிறுவனங்களில் 20 சதவிகிதம் பெண்களால் நடத்தப்படுகின்றன என்று தெரிகிறது. இதற்கு நேரெதிராக உயர் கல்வித்துறைகளில் தலைமைப்பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அடிமட்டத்தில் உள்ளது.
உயர்கல்வித்துறையில் டீன்களாக, துறைத் தலைவர்களாக, தேர்வு கட்டுப்பாட்டாளராக இடைநிலை பதவிகளில் பெண்கள் பணிபுரிந்தாலும், துணைவேந்தராகப் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது இந்தியாவில் வெறும் 7 சதவிகித பெண்கள் மட்டுமே துணைவேந்தர் பதவியில் உள்ளனர்.
இந்த 7 சதவிகிதத்தில் பாதி பேர், பெண்கள் மட்டும் பயிலும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிகின்றனர். ஏனெனில் அப்பல்கலைகழகங்களில் பெண்கள் மட்டுமே துணைவேந்தர் பொறுப்பில் பணிபுரிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு துறையில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்று அதில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்குச் செல்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணிபுரியும் வி. எஸ். எலிஸபெத் கூறுகையில், ``உயர்பதவிகளில் பதவி உயர்வு கிடைக்க தாமதம் ஏற்பட, திருமணம் அல்லது குழந்தைப்பேற்றின் போது வேலையை விடுவது அல்லது வேலையை மாற்றுவது போன்றவை காரணங்களாக இருக்கின்றன.
இதன்மூலம், பெண்கள் தங்கள் சீனியாரிட்டியை இழக்க நேரிடுகிறது. சில வருட இடைவெளிக்குப் பின் ஒரு பேராசிரியர் மீண்டும் வேலையில் சேரும்போதும், அவர்களின் சீனியாரிட்டியை தொடர்வதில் சிக்கல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.