`சட்டங்கள் வந்தாலும் இவர்கள் நிலை மாறவில்லை’ - பீடி சுற்றும் பெண்களின் துயரங்களைப் போக்குமா அரசு?

பீடித் தொழிலாளிகள் ஒப்படைக்கும் பீடியில் பாதியைச் சரியாக சுற்றாவில்லை என்று போலிக் காரணங்கள் சொல்லி, உடைத்துவிட்டு, அவர்களுக்குச் சேரவேண்டிய சம்பளத்தை முழுமையாகக் கொடுக்காமல் மோசடி செய்யப்படுகிறது.

Published:Updated:
பீடிக்கட்டுகள்
பீடிக்கட்டுகள்
0Comments
Share

`பீடி, புகையிலை போன்றவை உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஆபத்தான பொருள்கள். அதனால் யாரும் புகைக்காதீர்கள்’ என்று தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பீடியைப் புகைத்தலே ஆபத்தானதென்றால் பீடி, புகையிலை ஆகியவற்றின் கூடவே வாழும் மக்களின் வாழ்க்கையே தினமும் ஆபத்தில் இருக்கிறது. இந்தியாவில் பீடிசுற்றுவதை மட்டுமே தொழிலாகக்கொண்டு பல குடும்பங்கள் வருமானம் ஈட்டுகின்றன. பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கையும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன.

பீடி சுற்றும் பெண்கள்
பீடி சுற்றும் பெண்கள்

பீடித் தொழில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் மட்டும் 12 மாநிலங்களில் பீடித் தொழில் நடைபெறுகிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பீடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். ஆரம்பத்தில் தொழிற்சாலைத் தொழிலாக இருந்த பீடி, தற்போது வீட்டிலேயே செய்யும் தொழிலாக மாறிவிட்டது. இதனால் பீடித் தொழில் இடைத்தரகர்களால் நடைபெறுகிறது. பீடிசுற்றுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

தென்காசி மாவட்டம், பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பீடித் தொழிலாளி சொர்ணம் பேசுகையில், "நான் 15 வயசிலிருந்து பீடி சுத்துறேன். என்கூட கிராமத்துல 500 பேர் சேர்ந்து சுத்துறாங்க. இந்தத் தொழில் ரொம்ப பாவப்பட்ட வேலைம்மா. ஆயிரம் பீடி சுத்துனாத்தான் இருநூத்து சொச்சமாச்சும் கிடைக்கும். புகையிலையை தினம் தினம் கையில தொடுறதாலயும் சுவாசிக்கிறதுனாலயும் 60 வயசு வரை வாழவேண்டியவங்க எல்லாம் 40 வயசுலேயே செத்துப்போயிடுறாங்க.

பீடி சுற்றும் பெண்கள்
பீடி சுற்றும் பெண்கள்

கிராமம்தானே விவசாயம் பண்ணலாம்னு நிறைய பேர் சொன்னாலும் சொந்தமா விவசாயம் பண்ண நிலம் இல்லையே... இந்தத் தொழிலால நோய் வந்தாலும், போதுமான கூலி இல்லைன்னாலும் கடன் தொல்லைக்காகச் சுத்தித்தானே ஆகணும்... இதுல கிடைக்கிற வருமானம் குடும்பம் நடத்தப் போதுமானதா இல்லை" என்றார்.

பீடித் தொழிலாளிகளின் உரிமைக்காகத் தொடர்ந்து வேலை செய்துவரும் செயற்பாட்டாளரும், நவ ஜீவன் அமைப்பின் இயக்குநருமான நளசந்திரசேகரன் பேசுகையில், "பீடித் தொழிலாளர்களுக்கும், தொழிற்சாலை நிறுவனத்துக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. இவர்களுக்கு இடையே இடைத்தரகர்கள் உள்ளனர். இடைத்தரகர்கள் பீடி சுற்றுவதற்குத் தேவையான பொருள்களைத் தொழிலாளர்களிடம் கொடுப்பார்கள், தொழிலாளர்கள் பீடிகளைச் சுற்றிய பிறகு இடைத்தரகர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பீடித் தொழிலாளிகள் ஒப்படைக்கும் பீடியில் பாதியைச் சரியாக சுற்றவில்லை என்று போலிக் காரணங்கள் சொல்லி உடைத்துவிட்டு, பீடித் தொழிலாளிக்குச் சேரவேண்டிய சம்பளத்தை முழுமையாகக் கொடுக்காமல் மோசடி செய்கின்றனர் இடைத்தரகர்கள். இதனால் பீடித் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். பீடித் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால் இடைத்தரகர்கள் வார்த்தைகளால் பாலியல்ரீதியாக தொல்லை கொடுப்பதாகப் பெண்கள் கூறுகிறார்கள்.

நளசந்திரசேகரன்
நளசந்திரசேகரன்

பீடித் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒரு நாளைக்குள் 1,000 பீடிகளைச் சுற்றி முடித்தால்தான் இருநூற்று சொச்சமாச்சும் கிடைக்கும் என்பதால் கழிவறைக்குச் செல்லக்கூட நேரம் ஒதுக்காமல் பீடி சுற்றுவதில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். தொழிலாளர்கள் பீடியைத் தினமும் கையாள்வதாலும், இயற்கை உபாதைகளைச் சரிவர வெளியேற்றாதாலும் உடலில் பல பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். மூச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற நோய்களால் வேதனைப்படுகின்றனர். நோய்களுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்குச் செல்லக்கூட நேரம் ஒதுக்காமல் தொடர்ந்து பீடி சுற்றிக்கொண்டிருக்கின்றனர். கொரோனா காலத்தில் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. இவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் சுயமரியாதையும் இங்கு மறுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் இதைத் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகம் கண்டுகொள்வதில்லை. புகை, மக்களுக்குத் தீங்கு விளைவித்தாலும் புகையிலைக்கு திடீர் தடைவிதித்தால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை இழப்பார்கள். அவர்கள் சம்பளத்தை எதிர்பார்த்து இருக்கும் குடும்பங்களில் அடிப்படைத் தேவைகூட கேள்விக்குறியாகிவிடும். அவர்களின் மாற்று வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் காசி விஸ்வநாதன் பேசுகையில், ``பீடித் தொழிலில் மக்கள் ஈடுபடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அடித்தட்டு மக்களுக்கு வேறு வேலைவாய்ப்பு இல்லாததாலும், பீடி சுற்றுவது எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய தொழிலாகவும் இருப்பதால் இந்தத் தொழிலில் பெரும்பான்மையான மக்கள் ஈடுபட்டுவருகின்றனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், தென்காசி ஆகிய இடங்களில் பீடித் தொழில் பரவலாக இருக்கிறது. பீடித் தொழில் மூன்று வகையில் நடைபெறுகிறது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பீடியைச் சுற்றுவது. இந்த முறை இப்போது பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் இல்லை. தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பீடி சுற்றுவது... இந்த முறையில் பீடி சுற்றத் தேவையான பொருள்களை இடைத்தரகர்கள் தொழிலாளிகளிடம் ஒப்படைப்பார்கள். சுற்றுவதற்கான கூலியும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

காசி விஸ்வநாதன்
காசி விஸ்வநாதன்

மூன்றாவது முறை முற்றிலும் வேறுபட்டது. தொழிலாளர்கள் பீடி சுற்றுவதற்குத் தேவையான பொருள்களை விலைகொடுத்து வாங்கி சுற்றுவார்கள். சுற்றி முடித்த பீடிகளை விலைக்கு விற்பார்கள். இந்த முறையில் இடைத்தரகர்களால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். எத்தனை தொழிலாளர் நலச்சட்டங்கள் வந்தாலும், பீடித் தொழிலாளர்களின் நிலை மாறவில்லை. இவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்யாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதாலும், பீடித் தொழில் இடைத்தரகர்கள் மூலம் நடப்பதாலும் இவர்களைத் தொழிலாளர் என்ற வரையறைக்குள் அரசும் சமூகமும் பார்க்கவில்லை. ஆனால், இவர்களும் மற்ற தொழிலாளர்கள்போலக் கூலிக்கு வேலை செய்யும் சாமானிய மக்களே என்பதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். பெரும்பகுதியான நிதி பீடித் தொழிலை நிர்வாகம் செய்வதற்குச் செலவு செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் நலனுக்காகப் பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. தடைசெய்யப்பட்டால் பீடித் தொழிலாளிகள் மாற்று வாழ்வாதாரம் குறித்து ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் பதில் இல்லை. புகையிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனைத் தொடர்புகொண்டோம். அவர், ``பீடித் தொழில் பரவலாகக் காணப்படும் மாவட்டங்களிலிருந்து அறிக்கை பெற்ற பிறகு தொடர்புகொள்கிறேன்’’ என்றார்.

புகைபிடித்தல், பட்டாசு போன்றவை மனிதனின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வருமானம் ஈட்டித்தரும் தொழிலில் எத்தனையோ ஆபத்துகள் இருந்தாலும் நம் மக்கள் கண்டுகொள்வதில்லை.

பீடி சுற்றும் தொழில்
பீடி சுற்றும் தொழில்

தொழிலில் கிடைக்கும் வருவாயைக்கொண்டு எப்படிக் குடும்பம் நடத்தலாம் என்பதுதான் மக்களின் பெரிய கவலை. புகை மாசு ஏற்படுத்துவதாக இருந்தாலும் பீடித் தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தாமல் திடீரென்று தடைவிதிப்பது வறுமைக்கு வழிவகுக்கும். முதலில் பீடித் தொழிலாளர்களின் மாற்று வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய அரசு முயல வேண்டும்.