`ஓ... இப்படித்தான் பீட்சா தயாரிக்கிறாங்களா': டோமினோஸுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!
பீட்சா தயாரிக்க பிசைந்து வைக்கப்பட்ட மாவு வைக்கப்பட்டிருந்த டிரேவுக்கு மேலே தரையைச் சுத்தம் செய்யும் மாப்கள், அங்கு வேலை செய்பவர்களின் துணிகள் என அனைத்தும் டிரேயில் படும்படி தொங்கவிடப்பட்டுள்ளன.
உணவுத் தயாரிப்பு என்பது ஒரு கலை. உணவின் சுவை மட்டுமன்றி, சுத்தம், தரம் என அனைத்தும் முக்கியம். சிறு சிறு உணவகங்களில், கண் முன்னே உணவுகள் தயாரிப்பதைப் பார்க்க முடியும். ஆனால், பெரிய உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவுகளின் சுவையை மட்டும் கொண்டாடித் தீர்க்கிறவர்கள், அந்த உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.
இது போன்ற ஒரு நிகழ்வுதான் பெங்களூருவில் உள்ள டோமினோஸின் பீட்சா தயாரிக்கும் உணவகம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. பீட்சா தயாரிக்க பிசைந்து வைக்கப்பட்ட மாவு வைக்கப்பட்டிருந்த டிரேய்க்கு மேலே, தரையைச் சுத்தம் செய்யும் மாப்கள், அங்கு வேலை செய்பவர்களின் துணிகள் என அனைத்தும் டிரேயில் படும்படி தொங்கவிடப்பட்டுள்ளன.
ஷாஹில் கர்நானி என்பவர், இதைப் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் `டோமினோஸ் இப்படி தான் நமக்கு புதிய பீட்சாக்களை வழங்குகிறது; மிகவும் அருவருக்கத்தக்கது’ எனக் குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவில் இந்த நிகழ்வு எங்கு நடந்தது என கர்நானி கூறவில்லை. இந்தப் பதிவுக்கு, மக்கள் பலரும் டோமினோஸுக்கு எதிரான தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள டோமினோஸ், ``சமீபத்தில் எங்கள் கடையில் நிகழ்ந்த சம்பவமொன்று எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. வாடிக்கையாளரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில், நிறுவனம் தன் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறது. இந்த உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.