ஆதித்யா - உதயநிதி, ஷிண்டே..? - அண்ணாமலையின் பேச்சும் சில சலசலப்புகளும்!

உத்தவ் தாக்கரேவை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டதைப் போல, தமிழகத்திலும் ஒரு ஷிண்டே புறப்படுவார் என்று அண்ணாமலை பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அண்ணாமலை
அண்ணாமலை
0Comments
Share

‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல் நிலைய மரணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கல்வித்துறை குழப்பங்கள்’ ஆகியவற்றை கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜூலை 5-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், பிரதமர் மோடி குறித்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் நடிகர் ராதாரவி பேசியது சமூகவலைதளங்களில் வைரலானது. அதேபோல, அண்ணாமலை பேசிய சில கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அண்ணாமலை தனது பேச்சில், ``முதியோர் உதவித் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்துவதாகச் சொன்னார்கள். தற்போது, 1,000 ரூபாய் வாங்குபவர்களில் இரண்டு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்களின் பெயரை நீக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்றார்கள். அதையும் செய்யவில்லை” என்றார் அண்ணாமலை. ஆனால், அண்ணாமலை இப்படிப் பேசியதற்கு மறுநாள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 50 ரூபாயை மத்திய அரசு உயர்த்திவிட்டது. இதற்கு அண்ணாமலை என்ன சொல்வார் என்று சமூகவலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், ``எதிர்க்கக்கூடிய கட்சிகள் இல்லாமல், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க வளர்ந்து வருகிறது. பா.ஜ.க-வின் ஆட்சியைப் பார்த்து, எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கரைந்துவிடுகின்றன. தமிழகத்திலும் இந்த நிலை வர வெகுதூரம் இல்லை” என்று கூறிய அண்ணாமலை, “மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே வெளியே வந்தார். ஆளுங்கட்சியாக இருந்த சிவசேனா தற்போது 13 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டதாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதுபோன்ற காலம் வரும்” என்றார் அண்ணாமலை.

சிவசேனாவும் தி.மு.க-வும் ஒன்றுதான் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, இந்த இரு கட்சிகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் கிடையாது என்றார். சிவசேனாவின் நிறுவனரான மறைந்த பால் தாக்கரேவின் குடும்பத்தையும் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தையும் ஒப்பீடு செய்து அண்ணாமலை பேசினார்.

“அங்கு பால் தாக்கரேவின் முதல் மகனும், இங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் மகனும் சினிமாவில் நடிக்க முயற்சித்து பெரிய வெற்றியைப் பெறாதவர்கள். பால் தாக்கரேவின் இரண்டாவது மகனும், கருணாநிதியின் இரண்டாவது மகனும் தங்கள் குடும்பங்களைவிட்டு விலகியிருக்கிறார்கள். பால் தாக்கரேவின் மூன்றாவது மகன் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தார். கருணாநிதியின் மூன்றாவது மகன் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கிறார்.

உதயநிதி
உதயநிதி

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, சிவசேனாவின் இளைஞர் அணித் தலைவராக இருக்கிறார். இங்கு முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார். ஆதித்யா தாக்கரே அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்ட பிறகு, ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டார். அதேபோல, இங்கும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்” என்றார் அண்ணாமலை.

இரு தலைவர்களின் குடும்பங்கள் பற்றிய ஆய்வுக்கு அண்ணாமலை மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ஆனால், ஒன்று மட்டும் இடிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்து, குடும்ப ஆட்சியை எதிர்த்துப் பேசும் அண்ணாமலை, இங்கு ஒரு ஷிண்டே புறப்படுவார் என்று பேசினால், அதற்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால், தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என்று சொல்லிவரும் அண்ணாமலை, ‘ஷிண்டே’ பாணியில்தான் ஆட்சியைப் பிடிப்பாரா என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

வழக்கம் போல, இந்தப் போராட்டத்தின்போதும் தி.மு.க-வுக்கு அண்ணாமலை கெடு விதித்திருக்கிறார். தனது 505 வாக்குறுதிகளையும் வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், கன்னியாகுமரி விவேகானந்தா பாறையிலிருந்து, பா.ஜ.க பாதயாத்திரை நடத்தும் என்று அண்ணாமலை எச்சரித்தார்.

மேலும், “365 நாள்களில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, கோபாலபுரத்தில் பாதயாத்திரையை நிறைவு செய்வோம்” என்றும் அவர் கூறியிருக்கிறார். கோபாலபுரத்தில் இப்போது யார் இருக்கிறார்கள்? மறைந்த முதல்வர் கருணாநிதி வாழ்ந்த வீடு அங்கு இருக்கிறது. இன்றைய முதல்வர் ஸ்டாலினின் வீடு, சித்தரஞ்சன் சாலையில் அல்லவா இருக்கிறது?!