குட்கா ஊழல் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ கடிதம்... எடப்பாடியை நெருக்குகிறதா பாஜக?!

குட்கா ஊழல் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை மையமாகவைத்து எடப்பாடியை வளைக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

போதைப்பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதைத் தடுக்க குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களின் விற்பனைக்குத் தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இருந்தபோதும், தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே குட்கா குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில், யார் யாருக்குத் தொடர்பு இருக்கிறது எனக் கண்டறியப்பட்டது.

குட்கா வழக்கு..விஜயபாஸ்கர்?
குட்கா வழக்கு..விஜயபாஸ்கர்?

குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், பல்வேறு துறைகள் ஆகியவற்றுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமானது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு பின்னர், சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

அதன்படி, முதலில் அதிரடிகாட்டிய சி.பி.ஐ., குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட ஆறு பேரைக் கைதுசெய்தது. இதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது. இதற்கிடையே, ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 27 பேர் மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது.

'குட்கா ஆதாரத்தை காட்டும் ஸ்டாலின்
'குட்கா ஆதாரத்தை காட்டும் ஸ்டாலின்

ஆனால், இந்த வழக்கில் வேறு எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., மத்திய பா.ஜ.க அரசுடன் மிக நெருக்கமாக இருந்தது இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. அதேபோல, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்ததால், குட்கா வழக்கு மொத்தமாகக் கிடப்பில் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க இது குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியிருக்கிறது. இது அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். ``தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போது, குட்கா வழக்கை மிக தீவிரமாகக் கையில் எடுத்தது. ஆனால், வழக்கு சி.பி.ஐ-யிடம் இருந்ததால் அ.தி.மு.க-வை எதுவும் செய்ய முடியவில்லை. 2017-ம் ஆண்டு எங்கள் கட்சி உடைந்தபோது ஆட்சியைத் தக்கவைக்க சில சமரசங்களைச் செய்தோம். ஏனென்றால், அப்போது தர்மயுத்தம் நடத்தி ஓ.பி.எஸ் பலமாக இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அதன் பின்னர், அணிகள் இணைந்தபோது மத்திய அரசுடன் மிக நெருக்கமாக இருந்ததால் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடியார் வெற்றிபெற்று, கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராகியிருக்கிறார். ஆனால், இந்த முறை ஓ.பி.எஸ் ரொம்பவே வீக்காக இருக்கிறார். நாங்களோ அம்மா இருந்ததுபோல மிக பலமாக இருக்கிறோம்.

இதனால், முன்பு இருந்ததுபோல, பணிந்து போகவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. குறிப்பாக, மேலிடத்திலிருந்து ஓ.பி.எஸ்-ஸுடன் சமாதானமாகப் போகச் சொன்னார்கள். எங்களுக்கு அது தேவையில்லை என்று எடப்பாடியார் மிக திடமாகக் கூறிவிட்டார். சமீபத்தில்கூட அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டததுக்கு எதிராக எடப்பாடி கருத்து சொல்லியிருந்தார். இதன் மூலம் வரும் எல்லா பிரச்னைகளையும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்பது தெளிவாகிறது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க ஆதரவு வேண்டும் என்பதால், அதுவரை அமைதியாக இருந்த பா.ஜ.க., வருமான வரித்துறை மூலம் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிய மாநில அரசின் அனுமதி தேவை என்பதால், சி.பி.ஐ கடிதம் எழுதியிருக்கிறது. ஏற்கெனவே, கொடநாடு வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை மூலம் தி.மு.க அரசு எங்களைப் பழிவாங்கத் துடிக்கிறது. இப்போது மத்திய பா.ஜ.க-வுடன் சேர்ந்து குட்கா வழக்கைக் கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க., ஓ.பி.எஸ்., தி.மு.க மூன்றும் மறைமுகக் கூட்டணியை அமைத்துள்ளனர். இது எங்களுக்குச் சோதனைக் காலம். நாங்கள் வலுவாக, திறமையாக இதை எதிர்கொள்வோம்" என்றனர் திடமாக.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தேசிய பா.ஜ.க மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ``வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது. இதற்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வருமான வரித்துறைக்கு சுதந்திரமான கரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எந்தப் பாகுபாட்டையும் பார்க்காது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க பலமான கட்சி. நாங்கள் அவர்களை மதிக்கிறோம். குடியரசுத் தேர்தலில் எங்களுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம். அதேசமயம், அவர்கள் மீதான பிற வழக்குகள் படிப்படியாக முன்னேறிச் செல்கின்றன. அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை. குட்கா வழக்கு தொடர்பாக, பா.ஜ.க காய்நகர்த்தல் இருப்பதாக முடிச்சுப் போடக் கூடாது" என்றார்.