``பெரியார் கொஞ்ச நாள் இருந்திருந்தால், இன்று திமுக இருந்திருக்காது” - சுப்பிரமணியன் சுவாமி

``கருணாநிதியிடம் பேசும்போது திராவிடம் என்பது சம்ஸ்கிருதம் என்றும், உங்கள் பெயரும் 40 சதவிகிதம் சம்ஸ்கிருதம் என்றும் அவரிடம் ஆதாரத்துடன் விளக்கினேன். இதுபோல் நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக்கொள்வோம்.” - சுப்பிரமணியன் சுவாமி

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி
0Comments
Share

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்தநாளை விராட் இந்துஸ்தான் சங்கமும், அவருடைய ஆதரவாளர்களும் மதுரையில் விழா எடுத்துக் கொண்டாடினார்கள்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

அதில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரவிருக்கிறது. நம் நாட்டின் கலாசாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்ததால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கினோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.

ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதே அதற்கு முக்கியக் காரணம். ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும்.

ஆங்கிலேயர்தான் திராவிடன் - ஆரியன் என்று பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவித் என்பதற்கு மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று அர்த்தம். இது திராவிடமாக மாறியது.

கருணாநிதியிடம் பேசும்போது திராவிடம் என்பது சம்ஸ்கிருதம் என்றும், உங்கள் பெயரும் 40 சதவிகிதம் சம்ஸ்கிருதம் என்றும் அவரிடம் ஆதாரத்துடன் விளக்கினேன். அதேபோல் உதயசூரியன் சின்னமும் சம்ஸ்கிருதம் என்று கூறினேன். இதுபோல் நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக்கொள்வோம்.

பிறந்த நாள் விழாவில்
பிறந்த நாள் விழாவில்

ராம் சேது திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தபோது எதிர்த்தேன். `அதற்கு ராமர் யார்?’ என்று கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் அவர் உடல்நலம் குன்றி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது ராமச்சந்திரா மருத்துவமனை. அப்போது நான் அவரிடம் 'கெட் வெல் சூன், ராமர் யார் என்று இப்போது தெரிகிறதா?' என்றேன்.

தமிழன் மூளையில் நம்பர் ஒன்னாக இருக்கிறான். ஆனால் தைரியம் இல்லை. என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என்று வட மாநிலத்திலுள்ள தலைவர்கள் கேட்பார்கள்.

தி.மு.க-விலுள்ள இராஜீவ் காந்தி என்பவர் மோசமாகப் பேசிவருகிறார். அது தொடர்பாக வழக்கு தொடுத்திருக்கிறேன். விரைவில் அவர் சிறைக்குச் செல்வார். தி.மு.க தினமும் ஒவ்வொரு பொய் சொல்லிவருகிறது. அடுத்த சட்டமன்றத்தில் மாற்றுக்கட்சியாக பா.ஜ.க இருக்கும்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

நான்கு வர்ணம் என்பது ஒன்றுமில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் ஒரே டி.என்.ஏ-தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தை எழுதிய வால்மீகி ஒரு ஷெட்யூல்டு காஸ்ட்தான். ஆனால் அவரின் தாய், தந்தை பிராமணராக இருந்தவர்கள்.

யாராவது என்னிடம் தகராறு செய்ய நினைத்தால் நானும் தகராறு செய்யத் தயாராக இருக்கிறேன்.

`இலங்கையிலிருந்து வரும் பயங்கரவாதிகளுக்குத் தமிழ்நாட்டில் சிகிச்சையளிக்கக் கூடாது. அப்படி அளித்தால் ஆட்சி கலைப்படும்’ என்று அப்போது கருணாநிதியிடம் கூறினேன். `ஆட்சியைக் கலைத்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும்’ என்று கருணாநிதி கூறினார்

1991-ம் ஆண்டு, ஜனவரி 31-ல் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தேன். ஆனால், ஒரு சைக்கிள்கூட எரியவில்லை. அடுத்து நடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு இரண்டு தொகுதிகள்தான் கிடைத்தன.

`தமிழ்’ என்று பேசும் கருணாநிதி மகனுக்கு, `ஸ்டாலின்’ என ரஷ்யன் பெயரை வைத்திருக்கிறார். தமிழில் பெயரை வைக்கவில்லை.

இந்தி கற்றுக்கொண்டால் என்ன தவறு... கட்டாயம் என்று கூறவில்லை. இந்தி கற்றுக்கொள்ள விரும்புவர்களை ஏன் தடுக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்.

பிறந்த நாள் விழா
பிறந்த நாள் விழா

பெரியார், பெரியார் என்று கூறுகிறார்கள். இன்று பெரியார் இருந்திருந்தால் தி.மு.க-வே இருந்திருக்காது.

பெரியார் என்ற ராமசாமி நாயக்கரிடம் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில்கட்டிக் கொடுத்து, மகன் ராமசாமி பராமரிப்பார் என்று உயில் எழுதிவைத்தார். அதன்படி கோயிலை முறையாகப் பராமரித்ததற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றிருக்கிறார் பெரியார். இது கி.வீரமணிக்கு தெரியுமா... அவர் இருக்கிறாரா... ஓடிப் போய்விட்டாரா?

கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் போட்டிருக்கிறார்கள். நமது சட்டப்படி எந்தக் கோயிலிலும் அரசு அதிகாரம் செலுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 32 ஆயிரம் கோயில்கள் தி.மு.க அரசு கட்டுப்பாட்டில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும். கோயிலைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்... உண்டியல் பணத்தை எடுக்கத் திட்டமிடுகிறார்கள்.

எல்லா கோயில்களையும் கையில் எடுத்து அர்ச்சகர்களை நியமிக்கிறார்கள். அதை மாற்றி எல்லாக் கோயில்களையும் சட்டப்படி மீட்டெடுத்து, பூசாரிகள் கையில் கொடுப்பேன். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு தமிழகத்துக்கு அடிக்கடி வந்து தி.மு.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்" என்றார்.