``சாவர்க்கர் பறவையின் இறக்கையில் தாய்நாடு வந்து செல்வார்" - கர்நாடக பாடநூல் சர்ச்சையும் விளக்கமும்
சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து வெளியில் சென்றதாக எழுதப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் எட்டாம் வகுப்பு கன்னடப் பாடப்புத்தகத்திலுள்ள சில வரிகள் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளன. கர்நாடக மாநிலத்திலுள்ள மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சமீபத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதன. இதில் எட்டாம் வகுப்புக்கான கன்னடப் பாடப்புத்தகத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய புதிய பகுதி இணைக்கப்பட்டிருந்தது. விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்துத்துவக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தியதில் முதன்மையானவராக அறியப்படுகிறார்.
புதிய பாடப்பகுதியில் இவரைப் பற்றி இடம்பெற்றிருக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பாடப்பகுதி, விநாயக் தாமோதர் சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 1911-ம் ஆண்டு முதல் 1924-ம் ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்தபோது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தாய்நாடு வந்து செல்வார்’ என எழுதப்பட்டிருக்கிறது.
சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில் ஒரு சிறிய துளைகூட இல்லை. ஆனாலும் புல்புல் பறவைகள் எப்படியாவது அந்த அறைக்குள் நுழைந்துவிடும். அவற்றின் இறக்கையில் அமர்ந்து சாவர்க்கர் அவருடைய சொந்த ஊருக்குப் பறந்து செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது. சிலர் இந்தப் பத்தியில் உள்ள வரிகள் அப்படியே பொருள்கொள்ளப்படும்போது மாணவர்களை மிகவும் குழப்பும் எனக் கூறியுள்ளனர். இதுவே சர்ச்சைக்கான காரணமாக இருக்கிறது.
ஆனால் புத்தக வடிவமைப்புக்குழுவில் உள்ளோர் இந்த சர்ச்சையை முற்றிலும் மறுக்கின்றனர். இது குறித்து புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா கூறுகையில், "இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை.
இந்தப் புலமை நயத்தை சிலரால் புரிந்துகொண்டு ரசிக்கத் தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். `பறவைமீது ஏறிப் பறந்தார்’ என்பதை அப்படியே பொருள்கொள்ளாமல் புலமை நயத்துடன் பார்க்க வேண்டும் எனப் புத்தக வடிவமைப்புக்குழு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.