`ராஜதந்திரி’ பண்ருட்டி ராமச்சந்திரனைச் சந்தித்த சசிகலா... அதிமுக-வில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

எம்.ஜி.ஆர் அதிமுக-வை உருவாக்கியபோது, பண்ருட்டி ராமச்சந்திரன். அவருக்குப் பக்கபலமாக இருந்து பல அரசியல் நகர்வுகளை முன்கூட்டியே அறிந்து சாதுரியமாகச் செயல்பட்டதாலேயே இவருக்கு 'ராஜதந்திரி' என்ற பட்டத்தை அ.தி.மு.க-வினர் கொடுத்தனர்.

Published:Updated:
பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்
0Comments
Share

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமையால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவருகிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பி.எஸ். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்குச் சென்றபோது, எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் ஒன்றாக இணைந்தனர். அப்போது, அ.தி.மு.க-விலிருந்து சசிகலா, தினகரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

இதனால், அ.தி.மு.க-வை மீட்கப்போவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கிய தினகரன், பின்னர் அதைக் கட்சியாக மாற்றி பொதுச்செயலாளராக ஆகி, இன்று தனியாகத் தேர்தலைச் சந்தித்துவருகிறார்.

ஆனால், தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த சசிகலா அ.தி.மு.க-வை மீட்கப்போவதாக, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக நீக்கப்பட்ட நிர்வாகிகள், கட்சியைவிட்டு விலகி நிற்கும் மூத்த நிர்வாகிகள், அதிருப்தித் தொண்டர்கள் ஆகியவர்களைச் சந்தித்துவருகிறார்.

இந்நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை, சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சசிகலா ஜூலை 31-ம் தேதி திடீரென சந்தித்துப் பேசியிருக்கிறார். அதேநேரத்தில், "இடைக்கால பொதுச்செயலாளர் என்பது தற்காலிகம்தான். பாதி நாடகம்தான் முடிந்திருக்கிறது. க்ளைமாக்ஸ் வந்த பிறகுதான் தெரியும். இதில் பி.ஜே.பி தலையிடவேண்டிய அவசியமில்லை.

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா
பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா

அதுவரை இந்தக் குழப்பங்கள் தொடரும். மேல்மட்டத்தில் நடக்கும் பிரச்னைகளெல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும். அதுவரை தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்" எனச் சூசமாகப் பேசியிருக்கிறார். ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்த கடந்த ஜூன் மாதம், பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசியிருந்தார். அதேபோல, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவமாகக் கருதப்படுவதற்கு பண்ருட்டி ராமச்சந்திரனின் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்?

தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றியிருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். பின்னாளில் எம்.ஜி.ஆர் அதிமுக-வை உருவாக்கியபோது, பண்ருட்டி ராமச்சந்திரன். அவருக்குப் பக்கபலமாக இருந்து பல அரசியல் நகர்வுகளை முன்கூட்டியே அறிந்து சாதுர்யமாகச் செயல்பட்டதாலேயே இவருக்கு 'ராஜதந்திரி' என்ற பட்டத்தை அ.தி.மு.க-வினர் கொடுத்தனர்.

எம்.ஜி.ஆருடன் பண்ருட்டி ராமச்சந்திரன்
எம்.ஜி.ஆருடன் பண்ருட்டி ராமச்சந்திரன்

1979-ம் ஆண்டு ஒடிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக் (ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்-க்கின் தந்தை), தேசிய அளவில் வலிமையான எதிர்க்கட்சியை உருவாக்க முயன்றுகொண்டியிருந்தார். தமிழ்நாட்டில் தி.மு.க- அ.தி.மு.க-வை இணைக்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

தி.மு.க - அ.தி.மு.க இணைப்பைத் தகர்த்தவர்

அதன்படி, சென்னை வந்த பிஜு பட்நாயக், விருந்தினர் மாளிகையில் முதல்வர் எம்.ஜி.ஆர் - எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கருணாநிதியுடன் அன்பழகனும், எம்.ஜி.ஆருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் இருந்தனர். பின்னர், கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் தனி அறையில் சுமார் 40 நிமிடங்கள் கலந்தாலோசித்தனர். இந்த ஆலோசனையில் இரு கட்சிகளும் இணைய முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மறுநாள் காலையில் வேலூர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.ஜி.ஆர்., "நான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்பது இருக்காது" என்று பகிரங்கமாக அறிவித்தார்

தி.மு.க - அ.தி.மு.க இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை
தி.மு.க - அ.தி.மு.க இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தச் சம்பவம் தொடர்பாக 2009-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசுகையில், "கழக இணைப்பைக் கெடுத்தது, விருந்தினர் மாளிகையில் இணைப்புப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, எம்.ஜி.ஆர் வேலூருக்குப் செல்லும்போது அவருடன் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான்" என்றார். அந்த வகையில் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

"குதிரை என்று இழுத்துவந்தேன், கழுதை என்று தெரிந்ததுமே சசிகலா நடராஜனிடமே விட்டுவிட்டேன்" என்று ஜெயலலிதாவையே பொது மேடையில் விமர்சித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைந்து, ஜெயலலிதா கட்சியை முற்றிலுமாக கைபற்றிய பின்னர், பண்ருட்டி ஒதுக்கப்பட்டார்.

விஜயகாந்த்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன்
விஜயகாந்த்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன்

பின்னர், தே.மு.தி.க என்ற கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த்துக்கு உறுதுணையாக இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ராமச்சந்திரன், விஜயகாந்த்துடன் ஏற்பட்ட கருத்து மோதலால், தே.மு.தி.க-வின் அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பின்னர், 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார்.

இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தது தொடர்பாக எடப்பாடி தரப்பில் கேட்டபோது, "எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சிக்குள் ராமச்சந்திரன் மிகவும் பவுர்ஃபுல்லாக இருந்தார். ஆனால், தற்போது அவர் ஒரு மூத்த தலைவர். அவ்வளவுதான். அவருடன் சசிகலா சந்தித்துப் பேசியதையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கட்சிக்குள் அவருக்கென்று எந்த பவரும், செல்வாக்கும் இப்போது இல்லை" என்றனர். ஆனால், தற்போது அ.தி.மு.க-வை கைப்பற்றுவதற்கு சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் சார்ந்த சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

ஜெயலலிதா, விஜயகாந்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன்
ஜெயலலிதா, விஜயகாந்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன்

இந்நிலையில், பல ஆண்டுகளாக அரசியல் நகர்வுகளைத் துல்லியமாகக் கணித்துவரும் பண்ருட்டி ராமச்சந்திரனின், சின்ன ஐடியாகூட களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, அவர் சார்ந்த சமூகத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த சசிகலா முயல்வதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கட்சி தொடர்பாக எம்.ஜி.ஆர் எழுதிய கடிதம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை தக்க சமயத்தில் வெளியிட வேண்டும் என்று சசிகலா அவரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.