சசி தரூர் Vs அசோக் கெலாட்: காங்கிரஸ் தலைவர் ரேஸில் முந்துவது யார்? - டெல்லி அப்டேட்ஸ்

ஒரு பக்கம் ஜி-23 குழுவிலிருந்து காந்தி குடும்பத்தை விமர்சித்த சசி தரூர், மறுபக்கம், ராகுல், சோனியாவுக்கு விசுவாசமாக இருக்கும் அசோக் கெலாட் எனக் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ரேஸில் முந்துவது யார்?

Published:Updated:
சசி தரூர் Vs அசோக் கெலாட்
சசி தரூர் Vs அசோக் கெலாட்
0Comments
Share

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. செப்டம்பர் 24-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவிருப்பதால், யார் யார் போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், கட்சித் தலைமைமீது அதிருப்தியிலிருக்கும் ஜி-23 குழுவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சசி தரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சி. அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. தொடர்ந்து, காங்கிரஸின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார் சோனியா காந்தி. 2020-ம் ஆண்டு, கட்சித் தலைமைமீது அதிருப்தியிலிருக்கும் 23 தலைவர்கள் ஒன்றுகூடி ஜி-23 என்ற குழுவை உருவாக்கினர். கபில் சிபல், குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு, `கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும். உட்கட்சித் தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். தொடர்ச்சியாக, காந்தி குடும்பத்துக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளை ஜி-23 குழுவிலுள்ள தலைவர்கள் பதிவுசெய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சில ஜி-23 தலைவர்கள் கட்சியிலிருந்தும் விலகினர். சமீபத்தில், கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகினார்.

சசி தரூர்
சசி தரூர்

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவி உட்பட மற்ற பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதுமிருக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மண்டலவாரியாக, `ராகுல் காந்திதான் காங்கிரஸ் தலைவராக வேண்டும்' எனத் தீர்மானங்கள் நிறைவேற்றிவருகின்றன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் இதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால், ராகுல் காந்தி அதற்குத் தயாராக இல்லை என்ற செய்திகளும் சொல்லப்படுகின்றன. `நான் கட்சிக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்கிறேன். பிரசாரத்தில் கலந்துகொள்கிறேன். ஆனால், தலைவர் பதவி மட்டும் வேண்டாம்' என்ற முடிவில் ராகுல் காந்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அசோக் கெலாட் Vs சசி தரூர்

இந்த நிலையில், நேற்று (செப்.19) டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர். கடந்த சில வாரங்களாகவே, சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்ற செய்திகள் பரவிவந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. `சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா சம்மதம் தெரிவித்துவிட்டார்' எனத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``தலைவர் பதவிக்கான தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இந்தத் தேர்தலில், யாரும் போட்டியிட அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

சோனியா - ராகுல் காந்தி
சோனியா - ராகுல் காந்தி

உட்கட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே ராஜஸ்தான் முதல்வரும், காந்தி குடும்பத்தின் விசுவாசியுமான அசோக் கெலாட் போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் உலவின. ஆனால், `ராகுல்தான் தலைவராக வேண்டும்' என்று ஆரம்பம் முதலே தெரிவித்துவருகிறார் அசோக் கெலாட். ஒரு பக்கம் ஜி-23 குழுவிலிருந்து காந்தி குடும்பத்தை விமர்சித்த சசி தரூர், மறுபக்கம், ராகுல், சோனியாவுக்கு விசுவாசமாக இருக்கும் அசோக் கெலாட் எனக் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

``ராகுல் காந்தி, தலைவர் தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, பூபேஷ் பாகல், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோர் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. ஆனால், சசி தரூருக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையில்தான் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைமைமீது அதிருப்தியிலிருப்பவர்கள் சசி தரூருக்கும், ராகுல் பக்கம் நிற்பவர்கள் அசோக் கெலாட்டுக்கும் ஆதரவளிப்பார்கள்'' என்கின்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

காங்கிரஸ் கட்சியின் நகர்வுகளை உற்று நோக்கும் சிலர், `` `ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கிறது' என்ற விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்க அசோக் கெலாட்டை, ராகுலும், சோனியாவும் முன்னிறுத்த நினைக்கலாம். அதே நேரம், கட்சியின் தலைவராகிவிட்டால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை கெலாட் இழக்க நேரிடும். எனவேதான், கெலாட்டுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட பெரிய ஆர்வமில்லை எனத் தெரிகிறது. சசி தரூருக்கு கட்சிக்குள் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர்கூட இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது'' என்கின்றனர்.