மலக்குடல் வலி, ஆணுறுப்பு வீக்கம்...குரங்கு அம்மையின் புதிய அறிகுறிகள்- மருத்துவர்கள் எச்சரிக்கை

குரங்கு அம்மையின் புதிய மாறுபாட்டில் நோயாளிகளுக்கு மலக்குடல் வலி மற்றும் ஆண்குறி வீக்கம் (எடிமா) போன்றவை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் முன்பு காணப்படவில்லை என்பதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Published:Updated:
குரங்கு அம்மை ( மாதிரி படம்)
குரங்கு அம்மை ( மாதிரி படம்)
0Comments
Share

உலகம் முழுவதும் குரங்கு அம்மையின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இந்தியாவில் இதுவரையில் 9 பேருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி இத்தொற்றின் விளைவாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 80 நாடுகளில் 21,000 க்கும் அதிகமானோர் குரங்கு அம்மை தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் காங்கோவில், மேற்கு நாடுகளைக் காட்டிலும் குரங்கு அம்மைப் பரவல் தீவிரமாக இருக்கிறது.

குரங்கு அம்மை
குரங்கு அம்மை

ஸ்பெயின் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மையால் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. கடந்த வாரம், உலக சுகாதார நிறுவனம், குரங்கு அம்மைத் தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. பெரியம்மை நோயை உண்டாக்கும் காரணியான வேரியோலா வைரஸ் என்கிற குடும்பத்தில் இருந்தே குரங்கு அம்மைக்கான காரணியும் உருவாகியிருக்கிறது.

சமீபத்தில், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (BMJ) வெளியிட்ட ஆய்வு முடிவு, பெரும் கவனத்துக்குள்ளாகியிருக்கிறது. குரங்கு அம்மையின் புதிய மாறுபாட்டில் நோயாளிகளுக்கு மலக்குடல் வலி மற்றும் ஆணுறுப்பு வீக்கம் (எடிமா) போன்றவை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் முன்பு காணப்படவில்லை என்பதால், இந்த ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கடுமையான தலைவலி, காய்ச்சல், சரும வெடிப்புகள் அல்லது புண்கள்/கொப்புளங்கள், பருக்கள், சோர்வு, குளிர், அக்குள், கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள நிணநீர் சுரப்பியின் வீக்கம், தசை வலி, முதுகுவலி ஆகியன, குரங்கு அம்மையின் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.

குரங்கு அம்மைத் தொற்று பரவலாக உள்ள நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தவர்கள் மூலம், இத்தொற்று பரவுகிறது. எனவே குரங்கு அம்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிக முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தொற்றுக்கு ஆளாகுபவர்களை, குறிப்பிட்ட நாள்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட நபருடன் புதிய நபர் தொடர்பு கொண்டால் ஐந்து முதல் 21 நாள்களில் இத்தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட சாத்தியங்கள் உள்ளன.

குரங்கு அம்மை
குரங்கு அம்மை

நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் மேலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் பொருள்களைக் கையாளும்போது பராமரிப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நோயாளியின் உடமைகளை, கழிவுகளை அகற்றுவது மற்றும் கிருமி நீக்கம் போன்றவை கவனமாகச் செய்யப்பட வேண்டும். குரங்கு மற்றும் பெரியம்மை வைரஸ்கள் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவை என்பதால், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் பெரியம்மைக்கான வைரஸ் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.