``ஜெயலலிதா அப்படி செய்யாமல் இருந்திருந்தால் அறிவாலயம் இருந்திருக்காது..!" - சீறும் புதுச்சேரி அதிமுக

”தொண்டர்களின் குமுறலால்தான் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடியார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கழகத்திற்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ் மற்றும் அவர் ஆதாரவாளர்கள் நான்கு பேரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம்” – புதுச்சேரி அ.தி.மு.க

Published:Updated:
புதுச்சேரி  - அதிமுக
புதுச்சேரி - அதிமுக
0Comments
Share

சென்னை வானகரம் பகுதியில் நேற்றைய தினம் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளாத ஓ.பி.எஸ் தரப்பு, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டது. அதனால் அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. அதில் சிலர் காயமடைந்தனர். களேபரங்களுக்கிடையே நடைபெற்ற அந்த பொதுக்குழுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அ.தி.மு.க அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதுச்சேரி அ.தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன், ``அம்மா ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்தில் இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. ஒருசில நிர்வாகக் காரணங்களால் ஏற்படுத்தப்பட்ட அந்த இரட்டைத் தலைமையை கலைத்துவிட்டு, மீண்டும் பொதுச்செயலாலர் என்ற ஒற்றைத் தலைமை ஏற்படுத்த வேண்டுமென்று தொண்டர்கள் விருப்பப்பட்டனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தி.மு.க-வை உறுதியுடன் எதிர்த்து அரசியல் செய்துவரும் எடப்பாடியார் அவர்கள் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன்மூலம் தொண்டர்களின் அடிமனதில் உள்ள ஆழமான எண்ணம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட கழகத்தை அழிக்க நினைக்கும் தி.மு.க-வுடன் ஏற்கெனவே மறைமுக தொடர்பிலும், தற்போது நேரடி தொடர்பிலும் இருந்துகொண்டு இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் ஓ.பி.எஸ். கழகத்திற்கு அவர் செய்துவரும் துரோகத்தின் ஒரு வெளிப்பாடுதான், நேற்று கழக அலுவலகத்தை ரௌடிகளுடன் அவர் வந்து தாக்கியது. ஒரு பேட்டை ரௌடியைப் போல நடந்துகொண்ட ஓ.பி.எஸ்-ஸின் செயல்பாடு அருவெறுப்பாக இருக்கிறது. கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் தலைமை அலுவலகம் ஒரு கோயில் போன்றது. அந்தக் கோயிலை அடித்து நொறுக்கியுள்ளனர். அப்படி என்ன ஒரு பதவி வெறி அவருக்கு? நெற்றியில் பொட்டு, விபூதியை வைத்துக்கொண்டு அமைதியானவர் என பவனி வந்தது பொய்யா?

ஒட்டுமொத்த தொண்டர்களின் குமுறலால்தான் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடியார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கழகத்திற்கு துரோகம்செய்த ஓ.பி.எஸ் அவர் ஆதரவாளர்கள் நான்கு பேரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம். இந்நிலையில் ஓ.பி.எஸ் அவர்கள் எடப்பாடியாரையும், கே.பி.முனுசாமியையும் நீக்குவதாக அறிக்கை விடுகிறார். எங்களுடைய தற்காலிக பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளரை நீக்க உங்களுக்கு என்ன தகுதியுள்ளது? தி.மு.க-வின் பகல் கனவு பலிக்காது. முதலமைச்சர் ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராகவும் உள்ளார். கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் இருப்பவருக்கு தலைமை பண்பு அவசியம். 1994-ம் ஆண்டு ம.தி.மு.க வைகோ 1,000 பேருடன் அறிவாலயத்தை தாக்க முயன்றார். அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த அம்மா அவர்கள், தலைமை பண்புடன் செயல்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை தடுத்து நிறுத்தினார். அவர் அப்படி செய்யவில்லை என்றால் அப்போது அண்ணா அறிவாலயம் இருந்திருக்காது.

ஆனால் நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன், அனைத்தும் முடிந்த பின்பு தலைமை அலுவலகத்தை மூடியுள்ளனர். இது அனைத்தும் தி.மு.க-வின் ஒரு செட்டப்தான். ஓ.பி.எஸ்-ஸுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் தி.மு.க-விற்கு ஏன்? அ.தி.மு.க-வை அழிக்க நினைப்பது தி.மு.க-வால் நடக்காத காரியம். தமிழ்நாட்டில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க, மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் வாக்களித்த மக்களுக்க்கான பணியை செய்ய வேண்டும். புதுச்சேரியில் உள்ள 56 பேரில் 44 பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் கலந்துகொண்டனர். அடுத்த முறை புதுச்சேரி ஆட்சிக் கட்டிலில் அ.தி.மு.க அமர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். யாராக இருந்தாலும் கழகத்திற்கு துரோகம் செய்யக்கூடாது. எடப்பாடியாரை கழகத்தின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள் கழகத்தை விட்டு வெளியேறிவிடலாம்” என்றார்.