அக்னிபத்: பணி நிரந்தரம், ஓய்வூதியம் இல்லாத ராணுவப் பணி... பீகார், ராஜஸ்தானில் வெடித்த போராட்டம்!

வெறும் நான்கு ஆண்டுகள் மட்டும் வேலை கொடுத்தால் எஞ்சிய நாளில் என்ன செய்வது என்று கேட்டு ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Published:Updated:
பீகாரில் போராட்டம்
பீகாரில் போராட்டம்
0Comments
Share

மத்திய அரசு புதிதாக நான்கு ஆண்டுகள் ராணுவப் பணி என்ற திட்டத்தை `அக்னிபத்’ என்ற பெயரில் அறிவித்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டு ராணுவப் பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்தவிதச் சலுகையும் இருக்காது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதுபோல் சேர்த்து, அவர்களில் சிறப்பாக பணியாற்றும் 25 சதவிகிதம் பேரை மட்டும் நான்கு ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ராணுவத்தில் சேரத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அவர்கள் ராஜஸ்தான், பீகாரில் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் புகுந்து வாலிபர்கள் இரண்டு நாள்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். 100-க்கும் அதிகமான இளைஞர்கள் ரயில் நிலையத்தில் புகுந்து அரசின் புதிய திட்டத்துக்கு எதிராக கோஷமிட்டவாறு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் போக்குவரத்தை நிறுத்தினர். இதனால் ஜன் சதாப்தி ரயில் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் வந்து போராட்டக்காரர்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அந்த வழியாக வந்த ரயில் மீது கற்களை வீசித் தாக்கினர்.

முஸாபர்பூரில் ராணுவ உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான வாலிபர்கள் சாலையில் டயர்களைப் போட்டு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள சக்கர் மைதானத்தில் ராணுவ உடற்தகுதி தேர்வுக்காகக் குவிந்திருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இது குறித்துக் கூறுகையில், ``இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் ராணுவத்துக்கு வேலைக்கு எடுப்பவர்களில் 25 சதவிகிதம் பேரை மட்டும் நான்குல் ஆண்டுகள் கழித்து தொடர்ச்சியாக பணியில் வைத்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். எஞ்சியவர்களுக்குப் பணிப் பாதுகாப்பும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் எதிர்காலம் என்னாவது?” என்று கேள்வி எழுப்பினர். ராஜஸ்தானிலும் ஜெய்ப்பூரில் டெல்லி - அஜ்மீர் நெடுஞ்சாலையில் 150-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மத்திய அரசின் புதிய ராணுவ ஆள் சேர்ப்புக் கொள்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரயிலைத் தீவைத்துக் கொளுத்தினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.