பொன்னியின் செல்வன்: `திரையில் சோழன்' - இலக்கியம் டு செல்லுலாய்ட், 72 வருடப் பயணத்தின் சுவாரஸ்யங்கள்!

"நான் 'பொன்னியின் செல்வன்' நாவலின் பெரிய ரசிகன். அதை இந்தியில் 'டப்' பண்ணாலும் சரியா வராது. இந்தியிலே 'மேரா நாம் வந்தியத்தேவன்' என்று சொல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியலை..." - கமல்ஹாசன்

Published:Updated:
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
0Comments
Share

"நீங்கள் ரொம்ப அற்புதமாக வர்ணித்துக் கதை எழுதிவிடுகிறீர்கள். அதை நாடகமாகவோ, படமாகவோ எடுக்க முடியாமல் எல்லோரும் சிரமப்படுகிறார்கள். நீங்களும் மற்ற எல்லோரையும் போலச் சாதாரணமாக எழுதினால் என்ன?" என்று அமரர் கல்கியிடம் நண்பர் ஒருவர் கோபப்பட்டார்.

"இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள், உங்கள் கவலை தீர்ந்து போகும். நாடகக் கலையின் தரம் உயர்ந்துகொண்டே வருகிறது" என்று அவருக்குப் பதில் சொன்னார் கல்கி.

கல்கி 1954-ம் ஆண்டு மறைவதற்கு முன்பாக எழுதிய புகழ்பெற்ற நாவல் `பொன்னியின் செல்வன்'. தமிழில் `கல்ட்' அந்தஸ்து பெற்ற படைப்பு. ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் அதிகம் விற்கும் நாவலாக அது இருந்தது. ஐந்து பாகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் தொடங்கி கோடியக்கரை வரை நீண்டு இலங்கைக்கும் செல்லும் கதைக்களம், ஃபிளாஷ்பேக் சம்பவங்களாக விவரிக்கப்படும் தக்கோலம் மற்றும் திருப்புறம்பியம் போர்க்களக் காட்சிகள் என்று அதன் பிரமாண்டம் எந்தத் திரைக்கதை ஆசிரியரையும் மலைக்க வைக்கும்.
பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் - அந்தக் காலம் vs இந்தக் காலம்
பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் - அந்தக் காலம் vs இந்தக் காலம்
பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் பலரும் மிரண்டு பின்வாங்கியது இதனால்தான்! பார்ட் 1, பார்ட் 2 என்று படம் எடுக்கும் பழக்கம் அறிமுகமாகாத அந்தக் காலத்திலேயே இதைப் படமாக்க முதலில் ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

1950-களில் ‘பொன்னியின் செல்வன்’ கதை ‘கல்கி’ வார இதழில் தொடராக வெளிவந்தபோதே அதன் வெற்றி எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. 1958-ம் ஆண்டு 10,000 ரூபாய் கொடுத்து ‘பொன்னியின் செல்வன்’ கதையின் உரிமையை வாங்கிய அவர், இயக்குநர் மகேந்திரனிடம் அதைத் திரைக்கதையாக மாற்றச் சொன்னார். அந்தப் படத்தைத் தானே டைரக்ட் செய்யவும் முடிவெடுத்தார். 'நாடோடி மன்னன்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்'தான் என்று அறிவிப்பும் வெளியிட்டார். 'திரையிலே தீந்தமிழ்க் காவியம்' என்ற வாசகத்துடன் அதற்கான விளம்பரமும் வந்தது...

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டார். ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, நம்பியார், டி.எஸ்.பாலையா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. பொன்னியின் செல்வனில் முக்கியமான கதாபாத்திரம் நந்தினி. அந்த கேரக்டரில் நடனக்கலைஞரான பத்மா சுப்ரமணியம் நடித்தால் பெரிதாகப் பேசப்படும் என்பது எம்.ஜி.ஆரின் ஆசை. பத்மாவின் தந்தையான பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியத்திடம் இதைச் சொன்னார். ஆனால், பத்மா சுப்ரமணியம் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியாக இருந்தார்.

பத்மா சுப்ரமணியம்
பத்மா சுப்ரமணியம்

'நாடோடி மன்னன்' வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அடுத்தடுத்து பல படங்களில் இடைவிடாமல் நடிக்க வேண்டியிருந்தது. இடையில் ஒரு கார் விபத்தில் சிக்கி எம்.ஜி.ஆர் ஆறு மாதங்கள் நடிக்க முடியாமல் போனது. குணமடைந்ததும், அவர் நடிப்பில் பாதியில் நின்றுபோயிருந்த நான்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழல். இதனால் எம்ஜிஆரின் கவனம் பொன்னியின் செல்வனிலிருந்து விலகியது. இதற்கிடையே கதை உரிமைக்கான நான்கு ஆண்டு கெடு முடிய, மீண்டும் 'பொன்னியின் செல்வன்' கதை உரிமையைப் புதுப்பித்துக்கொண்டார். அது அவர் மனதில் நிறைவேறா கனவாகவே இருந்தது.

1964-ம் ஆண்டு ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், “பொன்னியின் செல்வன் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கின்றன. அதை கலரில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க ஆசைப்படுகிறேன். ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்!” என்று சொல்லியிருந்தார். ஆனால், அதன்பின் அரசியல் களம் எம்.ஜி.ஆரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

மணிரத்னம் - கமல்ஹாசன்
மணிரத்னம் - கமல்ஹாசன்

அதன்பின் இந்தக் கனவைச் சுமந்தவர்கள் மணிரத்னமும் கமல்ஹாசனும். 1988-ம் ஆண்டே மணிரத்னத்தின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரன் பொன்னியின் செல்வனைத் தயாரிப்பதாக விளம்பரம் செய்தார். மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்து அதைச் செய்வதாக இருந்தது. தமிழில் மட்டுமே படத்தை எடுப்பதாக அப்போது முடிவு செய்திருந்தார்கள்.

1990-ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு கமல் அளித்த பேட்டியில் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

"'பொன்னியின் செல்வன்' உரிமை எங்கிட்டதான் இருக்கு. அது நானும் மணிரத்னமும் சேர்ந்து பண்ண வேண்டிய விஷயம். ஐந்து பாகங்களா இருக்கற நாவலைப் படமா சுருக்க முடியும்னு நம்பறேன். நீங்க நல்லா படிச்சீங்கன்னா, கதைங்கிறது நானூறு பக்கங்கள்தான். நிறைய வர்ணனைகள் உண்டு. பல பக்க வர்ணனைகளைச் சில அடிகள்ல சினிமாவில விஷுவலா காட்ட முடியும். படமா எடுக்கும்போது, சில விஷயங்களைத் தியாகம் பண்றதைத் தவிர்க்க முடியாது. ஆனா, நிச்சயம் பண்ணுவேன். அது பெரிய பட்ஜெட் படம். அதேசமயம், இந்தியில் 'டப்' பண்ணாலும் சரியா வராது. நான் 'பொன்னியின் செல்வன்' நாவலின் பெரிய ரசிகன். இந்தியிலே 'மேரா நாம் வந்தியத்தேவன்' என்று சொல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியலை..." என்று கமல் சொல்லியிருந்தார்.

மூன்று ஆண்டுகள் கழித்து கமல் திடீரென பொன்னியின் செல்வனை டி.வி சீரியலாகத் தயாரிக்க முடிவு செய்தார். அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர், பிரபல எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்.
ரா.கி.ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன்

"நாற்பது வாரம் தொடராக வரப்போகும் 'பொன்னியின் செல்வன்' சீரியலுக்கான ஸ்கிரிப்ட் ரெடி. எழுதறேன்னு சொல்றதைவிட எழுதறோம்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். நான் எழுதினா கமல் திருத்துவார். கமல் எழுதினா நான் திருத்துவேன். ரெண்டு பேரும் இணைந்து எழுதறோம்" என்று அப்போது விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னார் ரா.கி.ரங்கராஜன்.

அந்த டி.வி சீரியல் முயற்சியும் நின்றுபோக, மீண்டும் கனவு மணிரத்னத்துக்குக் கைமாறியது. 1997-ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அவர் பேட்டி தந்தபோது, "மணிரத்னத்திடமிருந்து பிரமாண்டமான ஒரு சரித்திரப் படைப்பை எதிர்பார்க்கலாமா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.

"உலகத் திரைப்படங்களின் ஸ்டாண்டர்டுக்கும் நமக்கும் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. சரித்திர சப்ஜெக்ட்டை விடவும் சினிமா ஆக்கப்பட வேண்டிய சப்ஜெக்ட்டுகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. சரித்திரப் படம் என்றால், அது என்னைப் பொருத்தவரை 'பொன்னியின் செல்வன்'தான்! அந்தக் காலத்திலேயே சினிமாவுக்காகவே திட்டமிட்டு எழுதப்பட்ட கதையோ என்றுகூட எனக்கு ஒரு திகைப்பு உண்டு. 'நாயகன்' படம் எடுத்து முடித்ததுமே, 'பொன்னியின் செல்வன்' எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் கமலும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். ஓரளவு 'ஸ்கிரிப்ட் வொர்க்' கூடத் தயார் பண்ணி வைத்தேன். பத்து வருஷத்துக்கு முன்னால் நான் பட்ட ஆசை அது. இப்ப எடுத்தா இன்னும் பிரமாண்டமா, இன்னும் பிரமிப்பு உண்டாக்குகிற வகையில் இருக்கணும்னு என் கற்பனை விரிஞ்சுக்கிட்டே போகுது! அது எப்படி, எப்போ என்னால் முடியும்னு தோணலை" என்று மணிரத்னம் சொல்லியிருந்தார்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

2010-ம் ஆண்டு, மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' திரைப்பட வேலையில் இறங்கிவிட்டார் என்ற செய்திகள் வெளியாகின. 2014-ம் ஆண்டு தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு, "மணிரத்னம் இயக்கப்போகும் 'பொன்னியின் செல்வன்'தான் தமிழில் நான் நடிக்கும் முதல் படமாக இருக்குமென நினைக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விஜய் மற்றும் அனுஷ்கா இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்'' என்று கூறியிருந்தார். ஆனால், அப்போதும் அது போட்டோஷூட்டோடு நின்றுபோனது.

கடைசியாக இப்போது கனவு கைகூடி வந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வருகிறான் சோழன்.