``நுபுர் ஷர்மா கருத்து ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

``ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது" - உச்ச நீதிமன்றம்

Published:Updated:
நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
0Comments
Share

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சால், பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் ஷர்மா, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த மாதம் பாஜக-வின் செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனத்துக்குள்ளது. இந்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவைக் கைது செய்யக்கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில் தான் கடந்த செவ்வாயன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக, அந்த நபரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலைசெய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா
ட்விட்டர்

அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், நுபுர் ஷர்மா-வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நுபுர் ஷர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விசாரணையில், ``ஜனநாயகம் அனைவருக்குமே பேச்சுரிமை வழங்கியுள்ளது. ஆனால், அதற்காகவெல்லாம் ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. மதம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய ஒரு நிலையில், ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது.

 உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். அனைத்து மக்களும் மற்ற மதத்தினருடைய நம்பிக்கைகளிலும், மற்ற விவகாரங்களிலும் மரியாதைக் கொடுக்கவேண்டும் என்ற சூழலில், நுபுர் ஷர்மா இப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார். இதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், நுபுர் ஷர்மா மீது பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் டெல்லி காவல்துறையின் நடவடிக்கை என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதுவரை நுபுர் ஷர்மா இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.