"வாங்கோ வாங்கோ ஒண்ணாகி" - அறிவுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் "வாங்கோ வாங்கோ ஒண்ணாகி" என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் "என்ஜாயி என்ஜாமி" பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

Published:Updated:
சந்தோஷ் நாராயணன், அறிவு
சந்தோஷ் நாராயணன், அறிவு
0Comments
Share

கடந்த ஜூலை 28ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது. இப்பாடலை எழுதிய பாடகர் அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் அவரின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் அறிவு இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்" என்றும் "உண்மைதான் எப்போதும் வெல்லும்" என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து இதற்குப் பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், "வாங்கோ வாங்கோ ஒண்ணாகி" என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் `என்ஜாயி என்ஜாமி' பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

"நான் இப்போது வேறு மொழியில் சுயாதீன இசை சார்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இதில்தான் என் முழு கவனத்தையும் நேரத்தையும் செலவிடுகிறேன்.

`என்ஜாயி என்ஜாமி' பாடலுடனான எனது பயணத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் `என்ஜாயி என்ஜாமி' பாடலை கம்போஸ், புரோகிராம் மற்றும் ரெக்கார்டிங் செய்து இணைந்து பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் `தயாரிப்பாளர்' என்று குறிப்பிடப்படுகிறது. இதை இந்தத் துறை சார்ந்த பலரும் ஏற்கெனவே அறிவர்.

நான், தீ, அறிவு எங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நிறைந்த அன்பிற்காகவும், தனியிசை மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம்.

தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து பாடலுக்காக பணியாற்றினர். தீ-யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல் வரிகள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன். இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கி, பல வாழ்க்கைக் கதைகளைக் கூறி அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குநர் மணிகண்டனுக்கு (காக்கா முட்டை, கடைசி விவசாயி) எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அற்புதமான திரைப்படமான 'கடைசி விவசாயி'தான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன்.

எஞ்சாயி எஞ்சாமி
எஞ்சாயி எஞ்சாமி

பாடலில் உள்ள ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றி. `பந்தலுல பாவக்கா' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று.

ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். இந்தப் பாடலில் 'என்ஜாயி என்ஜாமி'யும் அப்படிப்பட்ட ஒன்றுதான். என்னுடைய இந்தப் பொருத்தமற்ற சொற்றொடரைச் சுற்றி அறிவு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பாடலின் முழு உருவாக்கம் 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், வேடிக்கையாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது.

மாரியம்மாள்
மாரியம்மாள்

இந்தப் பாடலின் அனைத்து வருமானத்தையும், உரிமைகளும் தீ, அறிவு மற்றும் நானும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். இதில் நான் வெளிப்படைத் தன்மையுடனே இருக்க விரும்புகிறேன். தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் பணியாற்றி, சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு எந்தவொரு பாரபட்சமின்றி கிரெடிட்ஸ் கொடுத்துள்ளேன். என்ஜாயி என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சே அதற்கு சாட்சி.

செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி என்ஜாமி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அறிவு அப்போது வெளிநாட்டில் இருந்ததால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.

அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அறிவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படத்தில் நான் இசையமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் "கீச்சே கீச்சே" பாடல் 'என்ஜாய் என்ஜாமி' பாடலுக்குக் கொடுத்த அதே அன்பை 'கீச்சே கீச்சே' பாடலுக்கும் கொடுத்தால் அது ஒரு கலைஞனாக அறிவுக்கு பொருத்தமாக இருக்கும்.

Santhosh Narayanan
Santhosh Narayanan

ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக எனது தளத்தை நான் எப்போதும் பயன்படுத்தியிருக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். எனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பின்பற்றும் பணி நெறிமுறை, கலாசாரம் மற்றும் தோழமை ஆகியவை அனைவரும் அறிந்த ஒன்றே! கலையின் மீதும், நம் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கலைஞர்களின் மீதும் மட்டுமே அன்பு கொண்டிருங்கள், வரும் மாதங்களில் உலகளவில் பல புதிய தமிழ்க் குரல்களின் எழுச்சியைக் காண்போம்!

இந்தப் பாடல் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்தச் சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். மேலும் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள்!

வாங்கோ வாங்கோ ஒண்ணாகி!" என்று ஒரு நீண்ட பதிவிட்டிருந்தார்.