மிஸ்டர் மியாவ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் இயக்கவிருக்கும் ‘குற்றப் பரம்பரை’ கதையை விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
கார்த்தியின் ‘விருமன்’ படம், ஷூட்டிங் நேரத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. மதுரையில் இசை வெளியீட்டை நடத்தி மேலும் எதிர்பார்ப்பை எகிறவைத்தார்கள். படம் பெரிய அளவில் ஜெயிக்கப்போகிறது எனப் பலரும் அனுமானம் சொன்னார்கள். கூடவே இயக்குநர் முத்தையாவுக்கும், “அவசரப்பட்டு அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிவிடாதீர்கள், ரிலீஸுக்குப் பிறகு ரஜினி, அஜித், விஜய் எனப் பெரிய ஆட்களே உங்களை அழைப்பார்கள்” என அறிவுரை பகர்ந்தார்கள். ஆனாலும், ஆர்யாவுக்குக் கதை சொல்லி அட்வான்ஸ் வாங்கினார் முத்தையா. சமீபத்தில் ரிலீஸான ‘விருமன்’ படம் பெரிய அளவில் சறுக்க, “அந்தாளு தெளிவாத்தான் இருந்திருக்கார்” என்கிறார்கள் அர்த்தத்தோடு.
இயக்குநர் பாலாஜி சக்திவேலை நடிப்பின் பக்கம் இழுத்து வந்தார் இயக்குநர் வெற்றிமாறன். விளைவு, இப்போது தேதிகள் நிரம்பி வழிகிற அளவுக்கு நடிப்பில் பிஸியாக இருக்கிறார் பாலாஜி சக்திவேல். சமீபத்தில் கேட்ட அரசியல் கதை ஒன்று அவருக்கு மிகவும் பிடித்துப்போக, அதில் கதாநாயகனாகவும் களமிறங்குகிறார். சத்யராஜ் பாணியில் வில்லனிசம் கலந்த ஹீரோயிசப் பாத்திரமாம். அதனால் இந்த அரசியல் படத்துக்காக 50 நாள்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் பாலாஜி சக்திவேல்.