ரயில் நிலையத்துக்காக நிலம் கோரும் மெட்ரோ நிர்வாகம்... கமல் தரப்பு விளக்கம் என்ன?!

மெட்ரோ ரயில் பணிக்காக ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலின் நிலத்தைக் கைப்பற்ற மெட்ரோ ரயில் தரப்பில் பேசிவருகிறார்கள்.

Published:Updated:
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்
0Comments
Share

சென்னையில் 2-ம் கட்டமாக 61,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவருகின்றன. இதில் 4-வது வழிப்பாதை, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி, பூந்தமல்லி வரை செல்கிறது. இந்த வழித்தடத்தில், போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி வரையில் மேம்பாலமாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸிலிருந்து ஆழ்வார்பேட்டை, கச்சேரி சாலை, திருமயிலை, கலங்கரை விளக்கம் வரை பூமிக்கு அடியிலும் பாதை அமைக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் பாதை...
மெட்ரோ ரயில் பாதை...

இந்த வழித்தடத்தில் மொத்தம் 30 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது, இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, பள்ளங்கள் தோண்டப்படும் வேலை நடக்கிறது. 2025-ம் ஆண்டு இறுதியில் இந்தப் பாதையில் ரயில் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, ஒவ்வொரு ஏரியாவிலும் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்குச் சொந்தமான ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையிலுள்ள நிலத்தை, பாரதிதாசன் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் கைப்பற்ற முடிவெடுத்திருக்கிறது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

அந்த நிலத்தில், மூன்று மாடிகளைக்கொண்ட கட்டடத்தில்தான் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகமும், ‘டர்மரிக் மீடியா’ என்கிற சமூக வலைதள நிறுவனமும், கமல் ஓய்வெடுப்பதற்காக ஒரு சிறிய வீடும் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புதான் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அந்தக் கட்டடத்தில் திறக்கப்பட்டது.

அந்நிலத்தை ஒட்டியே தற்போது மெட்ரோ ரயில் பணி நடந்துகொண்டிருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக அந்நிலத்தில் 10 அடிக்கும் அதிகமான இடத்தைக் கொடுக்குமாறும், அதற்கான தொகையை மார்கெட் விலைக்கேற்ப கொடுத்துவிடுவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள், நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமான திரைப்பட நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய விவரம் அறிந்த சிலர், ``சுற்றுச்சுவர், காலிமனை மட்டுமே எடுக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. எனினும், நிலம் கட்டுமானம் என்கிறபோது, சரியான அளவில் எடுத்து அதற்குள் கட்டுமானத்தை முடிக்க வேண்டும் என்பது சரிவராது. எப்படியும், கூடுதலாக இரண்டு அடியாவது எடுக்கத்தான் செய்வார்கள்.

2007 காலகட்டத்தில், கோயம்பேட்டில் தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம், கோயம்பேடு மேம்பாலம் அமைப்பதற்காக இடிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் கைப்பற்றப்பட்டது. பாரிமுனையிலிருந்து வருபவர்கள், வலதுபுறம் கோயம்பேடுக்குத் திரும்புவதற்கான ‘யூ டர்ன்’ பாலம் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்டபோதே பெரும் சர்ச்சையானது.

விஜயகாந்த் கேள்வி
விஜயகாந்த் கேள்வி

கமல்ஹாசனின் நிலம் கையகப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, விஜயகாந்த் ஞாபகம்தான் எல்லோர் மனதிலும் வந்து நிழலாடுகிறது” என்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசியபோது, “நில ஆர்ஜிதம் என்பது பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ளக்கூடிய ஆரம்பகட்ட வேலை. மெட்ரோ நிர்வாகம் ஓராண்டுக்கு முன்பாகவே நோட்டீஸ் அனுப்பியது. இது புதிய விஷயமல்ல, பழைய விஷயம்தான். 10 அடி வரை தேவைப்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கட்டடத்தின் முன்பகுதியில் சுற்றுச்சுவரும், கே.பாலச்சந்தர் சிலை இருக்கும் காலி இடமும் உள்ளன.

மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.
மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரைதான் பில்லர் போடுகிறார்கள், அதன் பிறகு பூமிக்கடியில்தான் என்பதால் இன்னும் பவர் ஹவுஸைத் தாண்டவேயில்லை மெட்ரோ நிர்வாகம். பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரை முடித்த பின்னர்தான் இந்தப் பக்கம் வருவார்கள். அதனால், இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிர்வாகத்துடன், மெட்ரோ ரயில் நிர்வாகம் பேசிக்கொண்டிருக்கிறது. சுமுகமான முடிவு எடுக்கப்படும். அது என்ன மாதிரியான முடிவு என்பது இப்போது தெரியாது. எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும்போது மேற்கொள்ளக்கூடிய புராசஸ்தானே ஒழிய, இது விஜயகாந்த் மண்டபத்தைத் திட்டமிட்டு எடுத்ததுபோல், திட்டமிட்ட அரசியல் சதி இதில் எதுவும் இல்லை” என்றார்.