Live: ``ஓ.பி.எஸ் துரோகத்தின் அடையாளம்; பொருளாளர் பதவி... பொதுக்குழுவில் தெரியும்” - ஜெயக்குமார் பேட்டி

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிலையில், தேனிக்குச் சென்ற பன்னீர்செல்வமும் அவசரமாக சென்னைக்குத் திரும்புகிறார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

 ஜெயக்குமார்
ஜெயக்குமார்
0Comments
Share
Jun 27, 2022 11:49 AM IST

`ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம்’ - ஜெயக்குமார்

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில், அவைத்தலைவர் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது. 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர். உடல்நலக்குறைவால் சிலர் முன்னரே தெரிவித்துவிட்டுக் கலந்துகொள்ளவில்லை. ஜூலை 11-ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

பல முக்கிய முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 11-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது பற்றி ஆலோசித்தோம். கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளருக்கு அதிகாரமுண்டு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அடிப்படை தெரியவில்லை. அதிமுக-வுக்குப் பல துரோகங்களைச் செய்தவர். ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம்.

கூட்டத்தில் எடுத்த முடிவுகள் அனைத்தையும் இப்போது கூற இயலாது. எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிடுகிறேன். எதைச் சொல்லக் கூடாதோ அதைச் சொல்ல மாட்டேன். பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும்” என்றார்.

Jun 27, 2022 11:18 AM IST

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் கிழிப்பு!

Live: ``ஓ.பி.எஸ் துரோகத்தின் அடையாளம்; பொருளாளர் பதவி... பொதுக்குழுவில் தெரியும்” - ஜெயக்குமார் பேட்டி

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Jun 27, 2022 10:13 AM IST

எடப்பாடி தரப்பு ஆலோசனை!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூட்டத்துக்குப் புறப்பட்டார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Jun 27, 2022 10:13 AM IST

சென்னைக்குத் திரும்பும் பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்
ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

ஓ.பன்னீர்செல்வம் தேனிக்குச் சென்றிருந்த நிலையில் சென்னையில் எடப்பாடி தரப்பு இன்று தலைமை அலுவலகத்தில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தது. இந்தக் கூட்டத்தில் எந்த முடிவெடுத்தாலும் அது செல்லாது என அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், தேனியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறார் அவர்.

Jun 27, 2022 10:13 AM IST

நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த அழைப்பு...!

`அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்துவருகிறது. `அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெறும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், `பொதுக்குழு கூட்டப்பட்டிருப்பது சட்டவிரோதமானது’ என்று பன்னீர்செல்வம் தரப்பினரும் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழக அறிவிப்பாக நேற்று ஓர் அறிக்கை வெளியானது.

Live: ``ஓ.பி.எஸ் துரோகத்தின் அடையாளம்; பொருளாளர் பதவி... பொதுக்குழுவில் தெரியும்” - ஜெயக்குமார் பேட்டி

அந்த அறிக்கையில், ``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்காக 27-6-2022 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழக, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை கூட்டரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஓ.பன்னீர்செல்வம், சொந்த ஊரான தேனிக்குச் சென்றிருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் என யாருடைய கையெழுத்தும் இல்லாமல் தலைமைக் கழக அறிவிப்பு என்று இந்த அறிக்கை வெளியானது அதிமுக அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியது.

Jun 27, 2022 10:13 AM IST

பன்னீர்செல்வம் காட்டம்!

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடமே உள்ளன. அதன்படி இருவரின் ஒப்புதல் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால் இருவருடைய ஒப்புதலும் இன்றி, கையொப்பம் இல்லாமல் `கழகத் தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்’ என்ற பெயரில் கழக சட்டதிட்ட விதிகளுக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 27-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்துக்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் விதியை மீறிக் கூறப்பட்டிருக்கும் மேற்படி கூட்டம் கழக சட்டம் மற்றும் விதிகளுக்குப் புறம்பானது ஆகும். கழக சட்டத்துக்குப் புறம்பாகக் கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதைக் கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

Live: ``ஓ.பி.எஸ் துரோகத்தின் அடையாளம்; பொருளாளர் பதவி... பொதுக்குழுவில் தெரியும்” - ஜெயக்குமார் பேட்டி

பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாத நிலையில், சென்னையில் நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது சர்ச்சையானது. `இந்தக் கூட்டம் செல்லத்தக்கது அல்ல. அதில் எடுக்கப்படும் முடிவுகள் கழகத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது’ என்று ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்திருப்பது அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.