Live: இரு தரப்பு மோதலால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் - கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டார் ஓ.பி.எஸ்!
பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!
அதிமுக-வின் புதிய பொருளாளர்!
அதிமுக அலுவலகத்துக்கு சீல்!
இன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், காலையில் பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அதற்கு முன்னதாக எடப்பாடி-பன்னீர் தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் பேருந்து, கார்கள் சேதமடைந்தன. மேலும் பலருக்கு மண்டை உடைந்தது. இதனால் அந்தப் பகுதியே கலவரபூமியாகக் காட்சியளித்தது.
இந்த நிலையில் எடப்பாடி தரப்பினரால் பூட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை உடைத்து பன்னீர் தரப்பினர் உள்ளே புகுந்தனர். மேலும் கட்சி அலுவலகத்திலிருந்து பல்வேறு ஆவணங்களை ஓ.பி.எஸ் தரப்பினர் எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே மோதல் தொடர்பாக இரு தரப்பினர்மீதும் மாறி மாறிப் புகார்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் கோட்டாட்சியர், காவலர்களுடன் வந்து பன்னீரை வெளியேறும்படி பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது பன்னீர் தனது ஆதரவாளர்களுடன் தர்ணவில் ஈடுபட்டார். பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு தனது வாகனத்தில் புறப்பட்டார் பன்னீர். இதற்கிடையே, காவல்துறை அதிகாரிகளுடன் வந்த கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தார். மேலும் இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் சட்டவிரோதக் கூடுதல்களுக்கு தடைவிதிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக சிறப்புரையாற்றிவருகிறார் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், ``கட்சியைக் காக்க இடைக்கால பொதுச்செயலாளராக தன்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதிமுக-வில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள்.
1974-ல் ஒரு கிளைச் செயலாளராகக் கட்சியில் சேர்ந்தேன். பின்னர் ஜெயலலிதா அணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றேன். அம்மா அவர்கள் எனக்கு அமைச்சர் பதவி தந்தார். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ததால், கூடுதலாக பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியையும் எனக்கு வழங்கினார். எல்லாத் திட்டங்களையும் சிறப்பாகச் செயல்படுத்தினேன். நாம் செய்த பணிகளைத்தான் இன்று முதல்வராக ஸ்டாலின் திறந்துவைத்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரு கட்சி என்றால் அது அதிமுக-தான்.
மாண்புமிகு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சியை அளித்தோம். நமது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன... தினமும் கொலை, கொள்ளை நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு மேலாக போதைப்பொருள்... எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்கிறது... எது கிடைக்கிறதோ எது கிடைக்கலையோ கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கடந்த ஓர் ஆண்டில் என்ன பலன் கிடைத்துவிட்டது... என்ன திட்டம் புதிதாகக் கொண்டு வந்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசியவர், ``திமுக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மு.க ஸ்டாலினின் ஆட்சி, குடும்ப ஆட்சி. அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன” என்றவர், பன்னீர்செல்வம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.
``அண்ணன் நத்தம் விசுவநாதன் அவர்கள் ஒரு சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அண்ணன் பன்னீர்செல்வம் குறித்த தீர்மானம் அது. கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசியபோது அது தொடர்பாக அவரது வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒற்றைத் தலைமையின் தேவை குறித்துப் பேசினார்கள். அவர் அம்மாவுக்கு விசுவாசகமாக இருந்ததாகக் கூறினார். எங்கே நீங்கள் விசுவாசமாக இருந்தீர்கள்... ஓபிஎஸ்., தான் நிறைய விட்டுக் கொடுத்ததாகக் கூறுகிறார். நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம். அவர் என்ன விட்டுக் கொடுத்தார்... எதையுமே விட்டுக் கொடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எப்போதும் சுயநலம்தான். திமுக-வின் கைக்கூலி பன்னீர்செல்வம்” என்றார்.
``எடப்பாடி பழனிசாமியை நான் கட்சியைவிட்டு நீக்குகிறேன்.” - ஓ.பன்னீர்செல்வம்
பொதுக்குழுவில் எடப்பாடி தரப்பு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கட்சியைவிட்டு நீக்கியது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ``எடப்பாடி பழனிசாமி என்னைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. என்னைக் கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோரை நான் கட்சியைவிட்டு நீக்குகிறேன். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், என்னை நீக்கியதற்கு எதிராகவும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.
``ஓ.பன்னீர்செல்வத்தை, அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்க சிறப்புத் தீர்மானம்”
அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கழகப் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க அதிமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நத்தம் விசுவநாதன், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக-விலிருந்து நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அவருடன் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்.
சி.வி.சண்முகம் - கே.பி.முனுசாமி காரசார விவாதம்!
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றுவருகிறது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்ற கோஷம் பொதுக்குழுவில் ஒலித்தது. அப்போது இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், கே.பி முனுசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
இரட்டைத் தலைமை பதவி ரத்து... தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தற்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன்படி, ஏற்கெனவே இருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்துசெய்யப்படுகின்றன. இதன் மூலம் இரட்டைத் தலைமை ரத்துசெய்யப்படுகிறது.
மேலும் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும் நிரந்தர பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்படி அடுத்த நான்கு மாதங்களுக்குள் தேர்தல் மூலம் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவி நிரப்பப்படும் என்றும், அதுவரை தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி செயல்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தொடங்கியது செயற்குழுக் கூட்டம்!
உயர் நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், வானகரத்தில் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. செயற்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
பொதுக்குழுவுக்கு அனுமதி - உயர் நீதிமன்றம்
பொதுக்குழுவுக்கு தடை கோரிய பன்னீர் தரப்பின் மனு மீதான வழக்கில் நீதிபதி தனது தீர்பை வாசித்தார். அதில். ``பொதுக்குழுவைக் கூட்ட, பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க முடியாது. கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழுவில் கட்சி விதிகள் மீறப்பட்டால், நீதிமன்றத்தை நாடலாம்” என்றார்.
பொதுக்குழு மண்டபத்துக்கு வந்தார் எடப்பாடி!
காலை 6:45 மணிக்கு பொதுக்குழுவுக்குப் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, இரண்டு மணி நேர பயணத்துக்குப் பிறகுல் கூட்டம் நடக்கும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்தார். மறுபக்கம் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சித் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றி அங்கு தொண்டர்களைச் சந்தித்துவருகிறார். இதற்கிடையே, பொதுக்குழு மேடையில் பன்னீர்செல்வத்துக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய பன்னீர் தரப்பின் மனு மீதான வழக்கில் 9 மணிக்கு தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. அதற்கான நீதிபதியும் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார். பல்வேறு பரபரப்புகளுடன் நீடிக்கிறது அதிமுக ஒற்றைத் தலைமை சர்ச்சை!
கதவின் பூட்டை உடைத்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!
ஓ.பன்னீர்செல்வம் கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் செல்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், எடப்பாடியின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தைப் பூட்டினர். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அதிமுக கட்சி அலுவலகத்தில் மோதல்!
எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் வானகரதுக்குப் புறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டார். அங்கு தொண்டர்களைச் சந்திக்கவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்த எடப்பாடி - பன்னீர் ஆதரவாளர்கள் தங்களின் தலைமைக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப, அவர்களுக்குள் மோதல் வெடித்தது. இதனால் இரு தரப்பும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்லும் பன்னீர்!
எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் வானகரம் புறப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்தார். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்ட பன்னீர்செல்வம் அங்கும் தொண்டர்களைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம்... காலையிலேயே கூடிய உறுப்பினர்கள், தொண்டர்கள்!
அதிமுக பொதுக்குழுக் கூட்டம்.. காலையிலேயே கூடிய உறுப்பினர்கள் தொண்டர்கள் பிரசார வாகனத்தில் புறப்பட்ட எடப்பாடி!
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று காலையில் சென்னை வானகரத்தில் நடக்கவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசானி கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தனது இல்லத்திலிருந்து 6:45 மணிக்குப் புறப்பட்டார். கடந்த முறை பொதுக்குழுவுக்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, இந்த முறை பிரசார வாகனத்தில் செல்கிறார்.
பன்னீர்செல்வத்தின் திட்டம் என்ன?
நாளை பொதுக்குழு நடக்கவிருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேராகத் தலைமைக் கழகத்துக்குச் செல்வார் எனத் தகவல். தென் மாவட்டங்களிலிருந்து அதிகமாகத் தன் ஆதரவாளர்களை வரவழைத்திருக்கிறாராம்.
டெல்டாவிலிருந்து வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களும் ஓ.பி.எஸ் இல்லத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நேராகத் தலைமைக் கழகத்தை முற்றுகையிட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்கிறார்கள்.
தீர்ப்புக்கு முன்னரே பொதுக்குழு - எடப்பாடி திட்டம்?
9 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் நிலையில் காலை 6:15 மணிக்கு, பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது.
காலை 7 மணிக்கெல்லாம், பொதுக்குழு அரங்கில் இருக்குமாறு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆர்.எஃப்.ஐ.டி உடனான அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே பொதுக்குழு அரங்கில் அனுமதி அளிக்கப்படவிருக்கிறது.
காலையிலேயே பொதுக்குழு உறுப்பினர்களை வரச் சொல்லியிருப்பதால், அவர்களுக்கு டிபன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காலை 7:30 முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், அதற்கு முன்னரே பொதுக்குழு அரங்குக்குள் வந்துவிடத் திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. நல்ல நேரம் காலை 7:15 மணியுடன் முடிவடைகிறது. அடுத்ததாக, கெளரி நல்ல நேரம் காலை 9:15 மணிக்குத் தொடங்குகிறது. அதனால், `காலை 7 - 8 மணிக்கெல்லாம் பொதுக்குழுவைத் தொடங்கிவிடலாமா?’ என்று எடப்பாடி முகாமில் ஆலோசனை நடைபெறுகிறது என்பது தகவல்.
பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் பொதுக்குழுக் கூட்டம்!
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாளை காலை அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு கேள்விகள், வாதங்கள் நடைபெற்ற நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திங்கள் காலை 9 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கைத் தள்ளிவைத்தார். அதாவது பொதுக்குழு 9:15 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.