`டிமிக்கி’ கொடுத்த அண்ணாமலை முதல் அடங்காத கோபத்தில் செல்லூர் ராஜூ வரை - கழுகார் அப்டேட்ஸ்

புதுச்சேரியில் ஆர்டர் கொடுத்த திருச்சி! | ``கரன்ட் பில் கட்ட முடியலைன்னா ஏன் கட்சி ஆபீஸ் நடத்தணும்?!’’ | மறுத்து ஒதுங்கிய சையதுகான்! | திணறும் சி.பி.சி.ஐ.டி! | திணறும் எடப்பாடி தரப்பு! | எதிர்த்து பேசிய ஆர்.பி.உதயகுமார்... கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்!
கழுகார் அப்டேட்ஸ்!
0Comments
Share
பா.ஜ.க-வினர் நடத்திய போராட்டம்...
டிமிக்கி கொடுத்த அண்ணாமலை!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள செல்லப்பம்பட்டி ஊராட்சியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதாக ஒரு புகார் எழுந்தது அல்லவா... இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், லோக்கல் பா.ஜ.க-வினர் மூலம் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது.

அண்ணாமலை
அண்ணாமலை

முறைகேட்டைக் கண்டித்துப் போராட்டம் நடத்துமாறும், அதில் தானே கலந்துகொள்வதாகவும் உத்தரவாதம் கொடுத்திருந்தாராம் அண்ணாமலை. அவர் சொன்னபடி கடந்த 31-ம் தேதி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். ஆனால் அதில் பங்கேற்க வராமல், சொந்தக் கட்சியினருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டாராம் அண்ணாமலை.

தரமற்ற துடைப்பங்கள்...
புதுச்சேரியில் ஆர்டர் கொடுத்த திருச்சி!

வீதிகளிலுள்ள குப்பைகளைக் கூட்டி அகற்றுவதற்குத் தேவைப்படும் துடைப்பங்களை சமீபத்தில் கொள்முதல் செய்திருக்கிறது திருச்சி மாநகராட்சி. தமிழ்நாட்டில் துடைப்பமே இல்லாததுபோல, பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து புதுச்சேரியிலிருந்து அவற்றைக் கொள்முதல் செய்திருப்பது சர்ச்சையாகியிக்கிறது. பல லட்ச ரூபாய்க்கு வாங்கியும் எதிர்பார்த்த தரமும் இல்லையாம். இது பற்றி விசாரித்தால், ‘தமிழ்நாட்டில் தரச்சான்றிதழ் பெற்ற துடைப்பத் தயாரிப்பாளர்களே இல்லை. அதனால்தான் புதுச்சேரியில ஆர்டர் கொடுத்தோம்’ என்று கண்சிமிட்டுகிறாராம் மாநகரத்தின் உயர் பொறுப்பிலுள்ள அன்பானவர்.

``கரன்ட் பில் கட்ட முடியலைன்னா
ஏன் கட்சி ஆபீஸ் நடத்தணும்?!’’

புதுச்சேரியில் வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்த மாநில தி.மு.க-வை, கடந்த ஆண்டு ஒன்றாக இணைத்தது கட்சித் தலைமை. அத்துடன் வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ சிவாவை புதுச்சேரி மாநில அமைப்பாளராக அறிவித்தது. அவரோ தனது தொகுதியிலேயே டேரா போட்டு அமர்ந்திருக்கிறாராம்.

`டிமிக்கி’ கொடுத்த அண்ணாமலை முதல் அடங்காத கோபத்தில் செல்லூர் ராஜூ வரை - கழுகார் அப்டேட்ஸ்

கட்சி தொடர்பாக அவரிடம் பேச வேண்டுமென்றால் தொகுதிக்குத்தான் ஓடவேண்டியிருக்கிறது என்று புலம்புகிறார்கள் நிர்வாகிகள். கட்சி அலுவலகத்திலாவது அமரலாம் என்றால், கரன்ட் பில் அதிகமாகிறது என்று அங்கே லைட், ஃபேன்களைக்கூடப் போடவிடுவதில்லையாம். “கரன்ட் பில் கட்ட முடியலைன்னா... ஏன் கட்சி ஆபீஸ் நடத்தணும்?!” என்று புலம்புகிறார்களாம் உடன்பிறப்புகள்.

அ.ம.மு.க-வில் இணையச் சொன்ன தினகரன்...
மறுத்து ஒதுங்கிய சையதுகான்!

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்த ஓ.பி.எஸ்-ஸை வரவேற்க அவரின் ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான் மதுரை நோக்கிச் சென்றார். அப்போது மதுரையிலிருந்து தேனி வந்த டி.டி.வி.தினகரனை, மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய்ப் பகுதியில் வைத்து ஓ.பி.எஸ் அனுமதியோடு சந்தித்தார் சையதுகான். அந்தச் சமயத்தில், சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் இணைப்பு குறித்து நைசாகப் பேச்செடுத்தாராம் சையதுகான்.

தேனி மாவட்ட செயலாளர் சையதுகான்
தேனி மாவட்ட செயலாளர் சையதுகான்

அதற்கு தினகரன், ‘அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டுமென்றால் அவர்களை அ.ம.மு.க-வில் இணையச் சொல்லுங்கள்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். இதையடுத்து சையதுகான் அ.ம.மு.க-வில் இணையப்போவதாகத் தகவல்கள் பரவின. அதற்கு மறுப்பு தெரிவிக்கும்விதமாக தனது முகநூல் பக்கத்தில், ‘இறுதிமூச்சு இருக்கும் வரை அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் வழியில்தான் நடப்பேன்’ எனப் பதிவிட்டிருக்கிறார் சையதுகான்.

குவியும் வழக்குகள்...
திணறும் சி.பி.சி.ஐ.டி!

தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுக்கும் சில முக்கியமான வழக்குகளையும், லாக்கப் டெத், மாணவர்கள் இறப்பு குறித்த வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

சி.பி.சி.ஐ.டி
சி.பி.சி.ஐ.டி

ஆனால், அந்த வழக்குகளைக் கையாள்வதற்கான ஆள் பலம் சி.பி.சி.ஐ.டி பிரிவில் இல்லை என்பதுதான் சோகம். அதனால்தான் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படும் முக்கியமான வழக்குகளைக்கூட விரைந்து முடிக்க முடியாமல் இழுத்தடித்துவருகிறதாம் சி.பி.சி.ஐ.டி.

பதிவுத்துறையில் கல்லாகட்டும் அதிகாரி!
விஜிலன்ஸையும் மடக்கிய தந்திரம்!

பத்திரப்பதிவுத்துறையில் தென் மாவட்டத்தில் பணியாற்றும் ‘சாமி’ பெயர்கொண்ட சார்பதிவாளர் அவர். துறை அமைச்சரின் உதவியாளரைக் கைக்குள் போட்டுக்கொண்டு, இடமாறுதல்களில் புகுந்து விளையாடிவருகிறாராம் அவர். ‘கொடுக்கும் காசுக்குக் கச்சிதமாக வேலையை முடித்துக்கொடுப்பவர்’ என்று பெயர் வாங்கியிருப்பதால், இவரிடம் விண்ணப்பங்களையும், வைட்டமின்களையும் கொடுத்து பலர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்களாம். இவரின் வளர்ச்சியைப் பார்த்து விசாரிக்க வந்த விஜிலென்ஸ் அதிகாரிகளையும் மடக்கி, தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டாராம் ‘சாமி.’

புதிய மா.செ பதவிக்கு மல்லுக்கட்டு...
திணறும் எடப்பாடி தரப்பு!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் திருச்சி, பெரம்பலூர், கும்பகோணம் (தஞ்சை வடக்கு) மாவட்ட அ.தி.மு.க செயலாளர்கள் ஓ.பி.எஸ் பக்கம் போய்விட்டார்கள். இதனால், எடப்பாடி அணியில் இந்த மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதற்குப் பலத்த போட்டி நிலவிவருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில், தி.மு.க அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவதற்குச் செலவுசெய்த நிர்வாகிகள் எடப்பாடியைச் சந்தித்து, ‘பெரும் தொகையை செலவு செய்திருக்கிறேன்... என்னையை விட்டுட்டு, வேற யாருக்கும் மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்துடாதீங்கண்ணா’ என்று சொல்லி அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். ஒருவருக்குப் பதவி கொடுத்தால், இன்னொருவர் கோபித்துக்கொண்டு அணி மாறக்கூடும் என்பதால் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று திணறிக்கொண்டிருக்கிறாராம் எடப்பாடி.

எதிர்த்து பேசிய ஆர்.பி.உதயகுமார்...
அடங்காத கோபத்தில் செல்லூர் ராஜூ!

ஒரே மாவட்டத்தில் கோலோச்சினாலும், எப்போதுமே முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் ஏழாம் பொருத்தம்தான். “வருத்தம் தெரிவித்தால் ஓ.பி.எஸ் மீண்டும் அ.தி.மு.க-வில் சேரலாம்” என்று செல்லூர் ராஜூ முன்னர் சொன்னார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

``அது அவரது சொந்தக் கருத்து, கட்சியின் கருத்தல்ல” என்று ஆர்.பி.உதயகுமார் உடனடியாக மறுத்துப் பேச இருவருக்குமான மோதல் அதிகரித்திருக்கிறது. “எப்படி சீனியரான என்னை விமர்சிக்கலாம்... இதே வேலையாக இருக்கிறார் உதயகுமார்?” என்று எடப்பாடியிடம் செல்லூர் ராஜூ புகார் தெரிவித்திருக்கிறார். “விடுங்கண்ணே... பார்த்துக்கலாம்...” என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டாராம் எடப்பாடி. ஆனாலும், கோபம் அடங்கவில்லையாம் செல்லூராருக்கு.