ஒரே மரத்தில் 300 வகை மாம்பழம்! இந்தியாவின் மாம்பழத் தந்தையின் கண்டுபிடிப்பு!
பல வருடங்கள் கழித்து சச்சின் மாம்பழத்தை மக்கள் உண்ணும்போது கிரிக்கெட் ஹீரோவை நினைவுகொள்வார்கள். இரண்டு கைரேகைகள் ஒன்று போல் இருப்பது இல்லை, அதுபோலதான் மாம்பழங்களும்... மனிதர்களைப் போன்ற குணங்களைக் கொண்ட மாம்பழங்களை இயற்கை நமக்கு பரிசாகக் கொடுத்துள்ளது. - கலீம் உல்லாஹ் கான்!
ஒரு மாங்காய் மரத்தைக் கண்டாலே, அம்மரத்தின் மாம்பழங்களைப் புசிக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால், ஒரே மாமரத்தில் 300 வகையான மாம்பழங்கள் இருந்தால் எப்படி இருக்கும்.
300 வகையான மாம்பழம் ஒரே மரத்தில் எப்படி வளரும் என வினவுகிறீர்களா, இதைச் சாத்தியப்படுத்திக் காட்டி இருக்கிறார், இந்தியாவின் மாம்பழத் தந்தை என அழைக்கப்படும் கலீம் உல்லாஹ் கான்.
உத்தரப்பிரதேசம் மாலிகாபாத்தில் பழத்தோட்டம் வைத்திருக்கும் 82 வயதான கலீம் உல்லாஹ் கான் கடந்த ஐந்து வருடங்களில் சுமார் 300 வகையான மாம்பழங்களைக் காய்க்க வைத்துள்ளார்.
தோட்டக்கலையில் ஒட்டு கட்டும் முறை மிகவும் பிரபலம். அதாவது வளரும் தாவரத்தின் கிளையில் லேசாக அறுத்து வேறொரு தாவரத்தின் கிளையின் ஒரு பகுதியை இணைத்து கட்டிவிடுவார்கள். அந்தக் கிளை கெட்டியாகத் தாவரத்திலோ, மரத்திலோ பிடித்துக்கொண்ட பின் அதன் கட்டை அவிழ்த்து விடுவர். இப்படி செய்வதால் ஒரே மரத்தில் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வகை தாவரங்களைக்கூட வளர்த்து பயன் பெறலாம்.
தன்னுடைய பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இளம் வயதிலேயே ஒட்டு கட்டும் முறையை (grafting) சோதனை செய்து உள்ளார். புதிய மாம்பழ வகைகளைக் கண்டுபிடிப்பதில் தன்னுடைய ஆர்வத்தைக் காட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக ஏழு வகையான கனிகளை ஒரே மரத்தில் பராமரித்து வளர்த்துள்ளார். ஆனால், புயலின்போது அம்மரம் அடித்துச் சென்றது.
அதைத் தொடர்ந்து 1986-ம் ஆண்டிலிருந்து 300 வகையான மாம்பழ வகைகளை ஒரே மரத்தில் ஒட்டி கட்டும் முறையை பயன்படுத்தி வளர்த்துள்ளார். அதோடு இம்மரத்தில் விளைவிக்கப்படும் மாம்பழ வகைகளுக்கு ஐஸ்வர்யா, சச்சின் டெண்டுல்கர் என பிரபலங்களின் பெயரை வைத்துள்ளார். இந்த மரத்துக்கு தற்போது 120 வயது... ஒரு மாம்பழமே ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கும்.
இதுகுறித்து கலீம் உல்லாஹ் கான் தெரிவிக்கையில், ``வெறும் கண்களால் நீங்கள் பார்த்தால் இது வெறும் மரம். ஆனால், உள்ளதால் இதைப் பார்த்தால் இது ஒரு பழத்தோட்டம். உலகின் மிகப் பெரிய மாம்பழக் கல்லூரி.
மக்கள் வந்து போவார்கள்; ஆனால் மாம்பழங்கள் நிலையாக இருக்கும். பல வருடங்கள் கழித்து சச்சின் மாம்பழத்தை மக்கள் உண்ணும்போது கிரிக்கெட் ஹீரோவை நினைவு கொள்ளுவார்கள். இரண்டு கைரேகைகள் ஒன்று போல் இருப்பது இல்லை, அதுபோலதான் மாம்பழங்களும்... மனிதர்களைப் போன்ற குணங்களைக் கொண்ட மாம்பழங்களை இயற்கை நமக்கு பரிசாகக் கொடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.