திருமணம் செய்வதாக இளைஞரிடம் ரூ.30 லட்சம் வாங்கிய பெண் - வீட்டுக்குத் தெரிந்ததால் கணவருடன் தற்கொலை?
தனக்குத் திருமணம் ஆகவில்லை எனக் கூறி ஆன்றோவிடம் சந்தியா நெருங்கிப் பழகியிருக்கிறார். இதனால் சந்தியா கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்திருக்கிறார் ஆன்றோ.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே சூரியகோடு முளங்குழிப் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (40). இவருக்கும் சந்தியா (34) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜான் ஐசக் - சந்தியா தம்பதிக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதால் இவர்கள் கவலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜான் ஐசக் முதலில் சென்னையில் வேலை செய்துவந்தார். பின்னர் சொந்த ஊரில் பிளம்பர் வேலை செய்துவந்திருக்கிறார். அப்போது ஜான் ஐசக் மாதக்கணக்கில் வேலைக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் வங்கியில் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார் சந்தியா. அப்போது தன் கணவன் ஜான் ஐசக்குக்குத் தெரியாமல் அழகன்பாறைப் பகுதியைச் சேர்ந்த ஆன்றோ பிரப்ளின் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் சந்தியாவின் வீட்டுக்குச் சென்ற ஆன்றோ கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதாகத் தெரிகிறது. அப்போதுதான் சந்தியா கடன் வாங்கிய விஷயம் ஜான் ஐசக்குக்குத் தெரியவந்திருக்கிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே கோட்டூர்கோணத்திலுள்ள சந்தியாவின் தாய் சாந்தி வீட்டுக்குச் சென்ற ஆன்றோ, அவரின் மகள் 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் போலீஸில் புகார் அளிப்பேன் எனவும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து சாந்தி தன் மகள் சந்தியாவுக்கு போன் செய்திருக்கிறார். அவர் போனை எடுக்காததால் நேற்று முன்தினம் இரவு சந்தியாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வீடு பூட்டப்படிருந்தது, கதவைத் தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பெட் ரூமில் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், ஜான் ஐசக் வாயில் நுரை தள்ளியபடியும் கிடந்திருக்கிறார்கள். இது குறித்து குலசேகரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது இருவரும் உயிரற்ற நிலையில் கிடந்தது தெரியவந்தது. இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். "சந்தியாவின் கணவன் பிளம்பிங் வேலை செய்தபோது கீழே விழுந்ததால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்திருக்கிறார். சந்தியா மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் வங்கியில் வேலைக்குச் சென்றுவந்திருக்கிறார். அப்போது 31 வயது ஆன ஆன்றோவுடன் சந்தியாவுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தனக்குத் திருமணம் ஆகவில்லை எனக் கூறி ஆன்றோவிடம் சந்தியா நெருங்கிப் பழகியிருக்கிறார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதால் சந்தியா கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்திருக்கிறார் ஆன்றோ. இந்த நிலையில் சந்தியாவுக்குத் திருமணம் ஆன விவரம் ஆன்றோவுக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து சந்தியாவைவிட்டு விலகுவதற்காக, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார் ஆன்றோ.
மேலும் போலீஸிலும் புகாரளிக்க ஆன்றோ தயாரானதால் இந்த விவகாரம் சந்தியாவின் கணவர் உள்ளிட்டவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்தே இருவரும் உயிரை மாய்த்துக்கொண்டனர். சந்தியா தன் கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டுத் தூக்கில் தொங்கினாரா அல்லது சந்தியா தற்கொலை செய்ததால் கணவன் ஜான் ஐசக் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. சந்தியாவின் மொபைல் போனில் லாக் எடுத்து ஆராய்ந்தால் முழு விவரமும் தெரியவரும்" என்றனர்.