பயமுறுத்தும் குரங்கு அம்மை... நோய்ப்பரவலைத் தடுக்க, செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்...
பாதிக்கப்பட்டவரின் துணிகளோடு, பாதிப்பில்லாத நபரின் துணிகளை ஒன்றாகச் சேர்த்து துவைக்கக் கூடாது. குரங்கு அம்மை நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில் குரங்கு அம்மைத் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் செய்ய வேண்டியவை என்னென்ன, செய்யக் கூடாதவை என்னென்ன போன்ற தகவல்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் குரங்கு அம்மையால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
செய்ய வேண்டியவை:
*குரங்கு அம்மை நோய்த்தொற்றின் அறிகுறிகளாக, இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் (swollen lymph nodes) போன்றவை உண்டாகும். நோய்த் தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நோயாளி மற்றவரிடத்தில் இருந்து தனிமைப் படுத்தப்பட வேண்டும்.
*சோப்பு மற்றும் நீரால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். ஹேண்ட் சானிடைசர்களையும் பயன்படுத்தலாம்.
*நெருங்கிய தொடர்பில் இருக்கும்போதே இந்த நோய்த்தொற்று பரவும். இருமும்போது வெளிப்படும் எச்சில் மூலமாகவும், உடல் திரவங்கள் மூலமாகவும் மிகவும் அருகில் இருப்பவர்களுக்கு இந்தத் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபரின் அருகில் இருக்கும்போது மாஸ்க் மற்றும் டிஸ்போஸபுள் கையுறைகளை அணிவது நல்லது.
*சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க கிருமிநாசினிகளைப் பயன்படுத்த வேண்டும்.
செய்யக் கூடாதவை:
* நோய்த்தொற்று பாதித்த நபரின் துண்டு, படுக்கை போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
* பாதிக்கப்பட்டவரின் துணிகளோடு, பாதிப்பில்லாத நபரின் துணிகளை ஒன்றாகச் சேர்த்து துவைக்கக் கூடாது.
* குரங்கு அம்மை நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி குழப்பக் கூடாது.
இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 8 ஆக பதிவாகியுள்ளது.