ஆன்லைன் ரம்மி: "ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாததுதான் திருச்சி இளைஞரின் தற்கொலைக்குக் காரணம்"- அன்புமணி

``ஆன்லைன் சூதாட்டத்துக்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நான் கூறியிருந்தேன்.'' - அன்புமணி

Published:Updated:
அன்புமணி
அன்புமணி
0Comments
Share

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் தற்கொலைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``திருச்சி மாவட்டம், மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது வேதனையளிக்கிறது. அவர் குடும்பத்துக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த 29-வது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான பா.ம.க-வின் தொடர் போராட்டம் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26-ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆளுநரும் உடனடியாக அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்தத் தற்கொலையை தடுத்திருக்கலாம்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாததுதான் இன்னோர் இளைஞரின் உயிரிழப்புக்குக் காரணமாகியிருக்கிறது.

அன்புமணி
அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது. அதைக் கருத்தில்கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.