தன் 60-வது பிறந்தநாளில் ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய கௌதம் அதானி!
இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பஃபெட் போன்ற உலக கோடீஸ்வரர்களின் வரிசையில் கௌதம் அதானியும் இடம்பெற்றுள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானிக்கு இன்று 60-வது பிறந்த நாள். இதையொட்டி அவரின் குடும்பத்தினர் ரூ.60,000 கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளனர். அதானியின் மொத்த சொத்து மதிப்பில் இது வெறும் 8% ஆகும். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளுக்கு இந்த நன்கொடை வழங்கப்படுகிறது. அதானி அறக்கட்டளை சார்பில் இந்தப் பணிகள் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பஃபெட் போன்ற உலக கோடீஸ்வரர்களின் வரிசையில் கௌதம் அதானியும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் கௌதம் அதானி மற்றும் அவரின் குடும்பத்தினர் ரூ.130 கோடியை நன்கொடையாக வழங்கி யிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளிலும் சேர்த்து ரூ.302 கோடியை நன்கொடையாகத் தந்திருக்கிறார்கள். இந்திய தொழிலதிபர்களில் அதிக நன்கொடை வழங்கியிருப்பவர்களின் பட்டியலில் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் முதல் இடத்தில் இருந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் ரூ.9,713 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் வழங்கிய மொத்த நன்கொடையின் மதிப்பு ரூ.18,070 கோடி. 2021-ல் ஷிவ் நாடார் ரூ.1,263 கோடியும், முகேஷ் அம்பானி ரூ.577 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர். இவர்கள் முறையே கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,884 கோடியும், ரூ.1,437 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.
டாடா குழுமத்தின் நிறுவனரான மறைந்த ஜாம்ஷெட்ஜி டாடாவை கார்ப்பரேட்களின் பிதாமகன் என்று சொல்லுவார்கள். இவர் 102 பில்லியன் டாலர் நன்கொடை கொடுத்துள்ளார், உலகிலேயே அதிக அளவில் நன்கொடை வழங்கியவர் வரிசையில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.
பில் அண்டு மெலிண்டாகேட்ஸ் ஃபவுண்டேஷன் 74.2 பில்லியன் டாலர் நன்கொடை வழங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹென்ரிவெல்கோம் 38.4 பில்லியன் டாலர் நன்கொடை வழங்கி 3-வது இடத்தில் இருக்கிறார்.