``தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றனர்... ஸ்டாலின் பொம்மை முதல்வர்” - எடப்பாடி பழனிசாமி

``திமுக ஒரு குடும்ப ஆட்சி. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவி, அதிகாரம் வேண்டுமென இந்த ஆட்சி செயல்பட்டுவருகிறது.'' - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்தக் கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ``திமுக அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், மக்களுக்கு ஒரு நுனி அளவுக்குக்கூட நன்மை கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன்தான் அமோகமாக நடைபெற்றுவருகின்றன. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் மக்களுக்கு வேதனையும் துன்பமும் மட்டும்தான் மிஞ்சின.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

திமுக ஒரு குடும்ப ஆட்சி. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவி, அதிகாரம் வேண்டுமென இந்த ஆட்சி செயல்பட்டுவருகிறது. ஒரு மாநிலத்துக்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார். ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட நான்கு முதலமைச்சர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். திமுக குடும்ப அதிகார மையமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் இன்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று அதிகாரத்தைச் செலுத்திவருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய மருமகன், மகன், மனைவி இவர்கள்தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

இந்தக் குடும்ப ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஆட்சிதான் தற்போது நடந்துவருகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் சொத்து வரியை உயர்த்தினார்கள். அது மக்களுக்குக் கொடுத்த முதல் போனஸ். அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் மக்கள் பல நன்மைகளைப் பெற்றனர். கொரோனா தொற்றிலிருந்து மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது, மக்களின் தலையில் இவ்வளவு பெரிய சுமையைச் சுமத்துவது நியாயமா... மக்களின் வேதனையைப் புரிந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்'' என்றார்.