`யாரும் பசியில் வாடக்கூடாது!' - துபாயில் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம் அறிமுகம்!
சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், 'வெண்டிங்' இயந்திரங்களை துபாய் அரசு நிறுவியிருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் துபாயில், சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், 'வெண்டிங்' இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. பெரும்பாலும் துபாயில் பிற நாடுகளில் இருந்து வந்து பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், 'டெலிவரி' ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களைக் கழிக்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்தார். இந்நிலையில்
எந்த ஒரு நபரும் பசியில் வாடக்கூடாது என்று எண்ணி இந்த இயந்திரத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 'Bread for all' என்ற இந்த திட்டம் கடந்த 17ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், அரபி ரொட்டி மற்றும், 'பிங்கர் ரோல்' ஆகிய இரண்ட வகை உணவுகள், தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன. க்ளிக் டு ஆர்டர்' என்பதைத் தேர்ந்தெடுத்ததும், இயந்திரம் தயாரிக்கத் தொடங்கி, ஒரு நிமிடத்தில் சூடான ரொட்டியை விநியோகிக்கிறது. துபாயின், 'அஸ்வாக்' மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.