கிரிக்கெட் வீரர் டு துணை முதல்வர்... பீகாரில் தவிர்க்க முடியாத சக்தி ஆகிறாரா லாலு மகன் தேஜஸ்வி?!

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனாக, ஐ.பி.எல் கிரிக்கெட் பவுலராக இருந்த தேஜஸ்வி யாதவ், பா.ஜ.க-வுக்கே சவால் விடுக்கும் ஒருவராக, பீகாரின் தவிர்க்க முடியாத சக்தியாக, இரண்டு முறை துணை முதல்வராக அரியணை ஏறியது எப்படி?

Published:Updated:
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
0Comments
Share

பீகாரில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், எதிர்க்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட ஏழு கட்சிகளுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் 8-வது முறையாகப் பொறுப்பேற்க, இரண்டாவது முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 77 இடங்களிலும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றிபெற்றன. கூட்டணி ஒப்பந்தப்படி நிதிஷ் குமார் முதல்வரானார். பா.ஜ.க-வின் தர்கிஷோர் பிரசாத் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமாரின் ஐ.ஜ.த-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேயான கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவிவந்தது. தொடர்ச்சியாக பா.ஜ.க ஒருங்கிணைத்த தேசியக்கொடி ஆலோசனைக் கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழா, புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழா என அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்துவந்தார்.

பின்னர், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டுக்குச் சென்ற நிதிஷ் குமார், லாலு பிரசாத், மகன் தேஜஸ்வி யாதவ், கட்சியின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நிதிஷ் குமார் வீட்டுக்குச் சென்று நடத்திய கூட்டத்தில் மெகா கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமாரைத் தேர்ந்தெடுத்தனர்.

லாலு - நிதிஷ்
லாலு - நிதிஷ்

அதைத் தொடர்ந்து, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கு உரிமை கோரி ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்து, தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலையும் அளித்தனர். அதை ஆளுநர் ஏற்றுக்கொள்ள நேற்று (10-08-2022) பதவியேற்புவிழா நடைபெற்றது. இதில், பீகாரின் முதலமைச்சராக 8-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார். அதேபோல துணை முதலமைச்சராக 2-வது முறையாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்

அதற்கு முன்னதாகப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், ``இந்தி பேசும் நிலப்பரப்பு முழுவதிலும் பா.ஜ.க-வுக்குக் கூட்டணிக் கட்சியே கிடையாது. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கும் கட்சி காணாமல்போய்விடும் என்பதுதான் வரலாறு. இதைத்தான் பஞ்சாப்பிலும், மகாராஷ்டிராவிலும் நாம் பார்த்தோம். `மாநிலக் கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம்’ என்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. பா.ஜ.க-வுக்கு கட்சிகளை, எம்.எல்.ஏ-க்களை மிரட்டவும், விலைபேசி வாங்கவும்தான் தெரியும். பா.ஜ.க-வின் அத்தகைய ஒரு அஜண்டாவை பீகாரில் செயல்படுத்த விட மாட்டோம். பா.ஜ.க-வின் அத்தகைய முயற்சியை எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம்" எனச் சூளுரைத்திருக்கிறார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனாக, ஐ.பி.எல் கிரிக்கெட் பவுலராக இருந்த தேஜஸ்வி யாதவ், பா.ஜ.க-வுக்கே சவால்விடுக்கும் ஒருவராக, பீகாரின் தவிர்க்க முடியாத சக்தியாக, இரண்டு முறை துணை முதல்வராக அரியணை ஏறியது எப்படி?

தேஜஸ்வி யாதவ் கடந்துவந்த பாதை:

சிறு வயது முதலே கிரிக்கெட் விளையாடுவதையே முழு நேரமாகக்கொண்டிருந்த தேஜஸ்வி யாதவ், உள்நாட்டு டி-20, முதல் தரப் போட்டி, 2-ஏ பிரிவுப் போட்டி, டெல்லி டேர்டேவில்ஸ் அணியின் சார்பில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி என அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடிவந்தார். அந்த நிலையில், திடீர் திருப்பமாக தந்தை லாலு பிரசாத் யாதவின் வழிகாட்டுதலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தார்.

தேஜஸ்வி
தேஜஸ்வி
Twitter

2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராகோபூர் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்ட தேஜஸ்வி, முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்தார். அந்தத் தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியமைத்து போட்டியிட்டு பெருவாரியான வெற்றியைப் பெற்றன. பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்க, 26 வயதேயான தேஜஸ்வி யாதவ் முதன்முறையாக துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

ஆனால், கருத்து வேறுபாடுகளால் இரண்டே ஆண்டுகளில் (2015-2017) இந்தக் கூட்டணி உடைந்தது. நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணை முதல்வர் பதவி தேஜஸ்வி யாதவைவிட்டுக் கைநழுவிப்போனது. அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார்.

அந்தச் சமயத்தில், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 41 மாதங்கள் சிறை, வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் லாலு பிரசாத்தால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல்போனது. அந்தச் சூழ்நிலையில், கட்சியை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் தேஜஸ்வி முன்பு இருந்தது. கட்சியில் முக்கியமான முடிவுகளையும் தேஜஸ்வி யாதவே எடுத்துவந்தார். ஆனால், மிகவும் இளையவரான அவரின் தலைமையை ஏற்காத பல மூத்த தலைவர்கள் கட்சியைவிட்டே வெளியேறினர். இருந்தபோதும், பல புதிய முகங்களுக்கு, கட்சியில் பல முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்த தேஜஸ்வி, இளைஞர் பட்டாளத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் பக்கம் இழுத்தார்.

தேஜஸ்வி
தேஜஸ்வி
Facebook/Tejashwi Yadav

அதைத் தொடர்ந்து 2020 பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து `மகாகாத்பந்தன்' என்ற பெரும் கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்தித்தார் தேஜஸ்வி யாதவ். எதிர்த்தரப்பில் பா.ஜ.க., விகாஷீல் இன்சான், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுடன் ஐக்கிய ஜனதா தளம் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவில், பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களில் வென்று இருபது இடங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், அந்தத் தேர்தலில் பா.ஜ.க (74), ஐ.ஜ.த (43), காங்கிரஸ் (19), எல்லாக் கட்சிகளையும்விட அதிகமான தொகுதிகளில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (75) வெற்றிபெற்று தடம்பதித்தது. பீகார் சட்டமன்றத்தில் மிக இளம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியில் அமர்ந்தார் தேஜஸ்வி யாதவ்.

நிதிஷ் குமார் - தேஜஸ்வி
நிதிஷ் குமார் - தேஜஸ்வி

அதைத் தொடந்து, மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்னையையும் சட்டமன்றத்தில் பேசி, முதல்வர் நிதிஷ் குமார் அரசுக்குக் கடும் நெருக்கடிகள் கொடுத்துவந்தார். அதேசமயம், கட்சிக்குள்ளாகவும் தேஜஸ்வி யாதவின் செல்வாக்கு வேகமாக வளர்ந்தது. ஒருகட்டத்தில், லாலு பிரசாத் ஜாமீனில் வெளிவந்தபோதும், அவரின் பேச்சு கட்சி மட்டத்தில் எடுபடவில்லை என்றும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்பார் என்றும் தேசிய ஊடகங்கள் வரை விஷயங்கள் கசிய, பீகார் அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு, லாலு பிரசாத் மறுப்பு தெரிவிக்கவும் விவகாரம் மெல்ல அடங்கியது. கட்சியின் நிறுவனத் தலைவராக லாலுபிரசாத் இருப்பினும், செயல் தலைவராகவும், கட்சிக்குள் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைவராகவும் தேஜஸ்வி யாதவ் வளர்ந்துவருகிறார். அதேபோல, இவரின் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப்பைக் காட்டிலும் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தேஜஸ்வி யாதவே செல்வாக்கில் முன்னிலை பெற்றவராகத் திகழ்கிறார்.

மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே பொதுவாக வெற்றிபெறும் என்ற கருத்தை உடைத்தெறியும் வகையில், 2022, ஏப்ரல் மாதம் நடைபெற்ற போச்சாஹான் சட்டமன்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளரை வீழ்த்தி மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் வெற்றிபெற்றார். அதன் மூலம், பீகார் சட்டமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்தது. அந்த நிலையில், கடந்த மாதம் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.எம் கட்சியின் நான்கு எம்.எல்.ஏ-க்கள் தேஜஸ்வி யாதவின் தலைமையை ஏற்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்திருக்கின்றனர். இதன் மூலம், சட்டமன்றத்தில் 80 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவெடுத்தது.

 தேஜஸ்வி யாதவ்! 
தேஜஸ்வி யாதவ்! 

இந்த நிலையில், எதிர்பார்த்தபடியே பா.ஜ.க கூட்டணியைவிட்டு வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம், மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணிவைக்க, இரண்டாவது முறையாக மீண்டும் துணை முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் தேஜஸ்வி யாதவ். இதன் மூலம் பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார்.