சின்னசேலம் போராட்டம்: எப்போது கலவரமாக, சூறையாடலாக மாறியது?!

போராட்டக்காரர்கள் பள்ளியை நோக்கி நகர ஆரம்பித்ததால், அவர்களைக் குறைவான எண்ணிக்கையிலிருந்த போலீஸால் தடுக்க முடியவில்லை. இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கவும், பதிலுக்குப் போராட்டக்காரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர்.

Published:Updated:
சின்ன சேலம் கலவரம்
சின்ன சேலம் கலவரம்
0Comments
Share

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இருக்கும் கணியாமூரின் உள்ள தனியார்ப் பள்ளியில், கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13-ம் தேதி அதிகாலையில் விடுதியின் 2-வது தளத்திலிருந்து குதித்து அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக, பள்ளி நிர்வாகம் சார்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் அவர் சடலத்தைப் பார்த்துக் கதறியழுதனர்.

மாணவியின் தாய் செல்வி
மாணவியின் தாய் செல்வி

மேலும், ``என் பொண்ணு தற்கொலை பண்ணிக்க மாட்டா. அவ சாவுக்கு ஏதோ காரணம் இருக்கு” என்று மாணவியின் தாய் குற்றம் சாட்டினார். மேலும், மாணவி சாவில் மர்ம இருப்பதாகக் குற்றம்சாட்டிய உறவினர்கள், பள்ளிக்குச் சீல் வைக்க வேண்டுமென்றும் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மாணவி எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றிய எஸ்.பி செல்வகுமார், அதன் அடிப்படையில், கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவர் கைது செய்யப்பட்டனர். இப்பள்ளியில் ஏற்கனவே பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மர்ம மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும், உடலை மறு உடற்கூறாய்வுக்கு செய்யவேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தனர். அதேபோல, மாணவி மரணம் குறித்து அவரின் தாயார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சாலை மறியல்
சாலை மறியல்

மேலும், இந்த விவகாரத்தை மூடி மறைக்க போலீஸார் முனைப்புக் காட்டியதாகவும் தகவல் வெளியானதால், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் 17-ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் காட்டுத்தீயாகப் பரவியது. அதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்கப்பட்டு போராட்டம் செய்வதற்காக ஏற்பாடுகள் தீவிரமடைந்தன.

சின்னசேலம் போராட்டம்: எப்போது கலவரமாக, சூறையாடலாக மாறியது?!

அதன்படி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், எஸ்.எப்.ஐ, தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில மத அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் தனித்தனியாகப் போராட்டத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

இதற்காக, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டத்திலும் இருந்தும் கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். இந்த போராட்டம் வழக்கமான ஒன்றாகதான் இருக்கும் என்று பலரும் எண்ணினர். அதன்படி, போராட்டம் நடைபெறவிருந்த நெடுஞ்சாலையில் மட்டும் 350 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி, 17-ம் தேதி காலை 9 மணிக்குப் போராட்டம் மிக திவிரமாக மேற்கொள்ளப்பட்டது. போராட்டக்காரர்கள் பள்ளியை நோக்கி நகர ஆரம்பித்ததால், அவர்களைக் குறைவான எண்ணிக்கையிலிருந்த போலீஸால் தடுக்க முடியவில்லை. இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி பேருந்துகள்
கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி பேருந்துகள்

அதில் டி.ஐ.ஜி பாண்டியன் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, அருகே இருந்த ஊர் பொதுமக்களுக்கும் போராட்டத்தில் இறங்கினர். ஆங்காங்கே இருக்கும் சிறிய ஊர்கள் வழியாகப் போராட்டக்காரர்கள் பள்ளியை நெருங்கினர். போராட்டக்காரர்களின் பலம் அதிகமானதால், எதுவும் செய்ய முடியாமல் போலீஸார்கள் திணறினர்.

காயமடைந்த போலீஸார்
காயமடைந்த போலீஸார்

போலீஸார் வந்த பேருந்தை அடித்து நொறுக்கி, முன்னேறிய போராட்டக்காரர்கள், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி, தீக்கிரையாக்கினர். மேலும், இந்த சந்தரப்பத்தை அருகே இருந்த ஊர் மக்களில் சிலர் பயன்படுத்தி, பள்ளியைச் சூறையாடினர். மேஜை, சேர் எனப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.

அப்பள்ளியின்மீது சுற்றுவட்டார மக்களுக்கு சில கசப்பான அனுபவமே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, போராட்டம் நடைபெற்ற நாள் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்கத்து ஊர் இளைஞர்கள் வேடிக்கை பார்க்கவும் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறார்கள். அதிகப்படியான கூட்டம் வந்ததும் போலீஸாரை தாக்கவும், பள்ளியை சூறையாடும் செய்து இருக்கிறார்கள்.

சின்னசேலம் போராட்டம்: எப்போது கலவரமாக, சூறையாடலாக மாறியது?!

போராட்டம் முழுவதும் வன்முறையாகி இருந்தநிலையில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "கள்ளக்குறிச்சி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்காக போராடிய அனைத்து சமுதாயத்தினருக்கும் நன்றி.

வன்முறையைக் கையாளாமல் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க அமைதியான முறையில் போராடும்படி கேட்டுக்கொள்கிறேன். மாணவியின் மரணத்தை அதிவிரைவில் விசாரித்து, அநீதி இழைத்தவர்க்குத் தண்டனை பெற்றுத் தந்து நீதியை நிலைநாட்டும் படி தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

கலவரம் | தனியார் பள்ளி
கலவரம் | தனியார் பள்ளி

இதற்கிடையே, மாணவியின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவரின் தந்தை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ``தங்களுக்கும் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை. வாட்ஸ் அப் மூலமாக அவர்கள் திரண்டு விட்டார்கள்" என மாணவி தந்தை தரப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.