அதிமுக பொதுக்குழு: ``அந்த உத்தரவுகள் பொருந்தாது... தனி நீதிபதியை அணுகுங்கள்!" - உயர் நீதிமன்றம்

``ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நாள் இரவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் யாவும், அந்த பொதுக்குழுக் கூட்டத்துக்கு மட்டுமே பொருந்தும். அடுத்துவரும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த உத்தரவுகள் பொருந்தாது." - உயர் நீதிமன்ற நீதிபதிகள்

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
0Comments
Share

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த மாதம் 23-ம் தேதி அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சலசலப்புக்குப் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்திலேயே அடுத்தப் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க செயற்குழு உறுப்பினரான சண்முகம் என்பவர், ஜூலை 11-ல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த வாரம் அவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ``பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது" எனக் கூறி, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணையைத் தொடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், ``ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நாள் இரவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் யாவும், அந்தப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு மட்டுமே பொருந்தும். அடுத்துவரும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த உத்தரவுகள் பொருந்தாது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், ஜூலை 11-ல் நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடைவிதிக்க இந்த முறையீட்டில் கோரிக்கை ஏதும் வைக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழுதான் விளக்கமளிக்க வேண்டும். ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்" எனக் கூறி, வழக்கு விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.