போர் வெறியர்களுக்கு ஒரு புதிய பாடம்! #AppExclusive

ஹிரோசிமா மீது 'முதல்' அணுகுண்டை வீசியவரின் பரிதாபமான கடைசிக் காலம்..!

Published:Updated:
A lesson for Warmongers -1965
A lesson for Warmongers -1965
0Comments
Share

மெரிக்க விமானப் படையில் அவன் ஒரு வீரன்! இரண்டாம் உலகப் பெரும் போரில் அவனுக்கு இடப்பட்ட கட்டளையை ‘இனிது’ முடித்ததற்காக அரசாங்கம் அவனுக்கு உயர்ந்த விருது வழங்கியது; பல்லாயிரம் டாலர் பண முடிப்பும் வழங்கியது.

அதற்கு முன்னரே அவனது பெயர் உலகச் செய்தித் தாள்கள் அனைத்திலும் வந்து விட்டது. அமெரிக்க ஏடுகளோ அவனை வாழ்த்தி வாழ்த்தி வானத்திலேயே கொண்டு வைத்து விட்டன. பெற்ற பட்டத்தோடும், முடிப்போடும் அந்த வீரன் பீடுநடை போட்டு இல்லத்திற்கு வந்தான். தன் அன்பு மனைவி தன்னை எப்படியெல்லாம் வரவேற்பாள் என்று கற்பனை செய்து செய்து, அவனது இதயம் பூரித்துப் போயிருந்தது. ‘டக் டக்’ கென்ற பட்டாளத்து வீரனின் பூட்ஸ் ஒலி கேட்டு அந்த மங்கை வாசலுக்கு விரைந்தோடி வந்தாள். அவளது முகத்தில் மகிழ்ச்சியில்லை; மருட்சியேயிருந்தது. கண்களிலே களிப்புக் கூத்தாடவில்லை; அனலையும் புனலையும் கக்கிக் கொண்டிருந்தன. “நில்! உள்ளே வராதே!” தன் அன்பு மனைவி எரிமலையாகி நிற்பது கண்டு அவன் ஒரு கணம் திகைத்தான். அருகில் நின்ற தன் குழந்தையை எட்டிப் பிடிக்க முயன்றான். “தொடாதே! உன் பாவக்கரங்களால் என் குழந்தையைத் தொடாதே!” அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். என்றாலும் அவளை அவனால் அமைதி கொள்ளச் செய்ய முடியவில்லை. இப்படி, கட்டிய மனைவியாலேயே துச்சமென மதிக்கப்பட்டுத் துரத்தப்பட்ட பரிதாபத்திற்குரிய அந்த மனிதன் யார்?

அவன்தான் கிளவ்டி ஈதர்லி! அவன்தான் ஹிரோசிமா மீது முதன் முதலாக அணுகுண்டு வீசியவன்! அவன்தான் உலகத்தில் முதன் முறையாக அணுகுண்டு வீசிய பெரும் பாவத்தைப் பெற்றுக் கொண்டவன். ஹிரோசிமா மீதும், நாகசாகி மீதும் குண்டு வீசப் பல போர் விமானங்கள் பறந்து சென்றன.

ஆனால் முதல் குண்டை, அதற்கான ‘பட்டனை’த் தட்டி விட்டு வெடித்தவன் கிளவ்டி ஈதர்லிதான்! அவனுக்கு உயர்ந்த விருதும், பண முடிப்பும் அளிக்கப்பட்ட செய்தியை அவனது இல்லாள் முதலில் செவியுற்ற போது, இன்பத்தின் எல்லையைத் தாண்டி ஓடத்தான் செய்தாள். ஆனால் அடுத்து அவள் டெலிவிஷனிலே கண்ட ஹிரோசிமாவின் அவலக் காட்சிகள், ஓரே நிமிடத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொன்று குவிக்கப்பட்ட கோரக் காட்சிகள், பெற்றோரை இழந்து தேம்பித் தேம்பி அழும் குழந்தைகளின் அழுகுரல், அவளது உள்ளத்தை இடித்துவிட்டது.

ஹிரோசிமாவிலே கையிழந்து, கால் இழந்து, கண் இழந்து அணுக் கதிர் வீச்சால் உடலெல்லாம் வெந்து போய் உயிரோடு வெந்து கொண்டிருந்த மக்களின் கதறல் அவளது இதயத்தைக் கதற வைத்தது. ‘இத்தகைய கொடிய பாவத்தைச் செய்தவனா தன் கணவன்?’ என்று நினைத்தபோது, அந்தப் பேதை பயித்தியம் பிடித்த நிலைக்கு உள்ளாகி விட்டாள். அதனால் தான் தன் கணவனை, “ஓடு! ஓடு! உலகம் மன்னிக்காத பாவத்தைச் செய்தவனே, ஓடு ஓடு!” என்று அவள் துரத்தினாள்.

அதுவரை ஈதர்லிக்கும் தான் எத்தகைய ‘கைங்கரியத்தை’ச் செய்திருக்கிறோம் என்பது தெரியாது. ‘ஐயோ! இட்ட கட்டளையைத்தானே நான் செய்து முடித்தேன்’ என்று அவனது இதயம் அழுதது! என்றாலும் அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. அப்பாவி மக்கள் மீது கோழைத்தனமாகக் குண்டு வீசி கேவலமான வெற்றி தேடிக்கொள்ள முனைந்தவர்களுக்கு என்றுமே மன்னிப்புக் கிடையாது என்று அவள் இடி முழக்கம் செய்தாள்.

தெருக்களிலே ஓடினான் ஈதர்லி. அவனுடைய நண்பர்கள் அவனை வெறுப்போடும் வேதனையோடும் பார்த்தார்கள். தான் செய்த பாவத்திற்கு ஈடாகப் பெற்ற பரிசுத் தொகையை அப்படியே ‘ஹிரோசிமா மக்கள் கஷ்ட நிவாரண நிதிக்கு’ அளித்தான். அளித்துவிட்ட கையோடு வீடு நோக்கி ஓடி வந்தான். ‘நீ செய்த கொடுமைக்கு இது பிராயச்சித்தம் ஆகாது’ என்று அவன் மனைவி கூறிவிட்டாள். ‘ஐயையோ’ என்று மீண்டும் அவன் வீட்டை விட்டு ஓடினான்.

A lesson for Warmongers -1965
A lesson for Warmongers -1965

ஹிரோசிமாவைப் பற்றிய திரைப்படங்கள் வெளி வந்தன. அந்தப் படங்களில் அநாதையாக விடப்பட்ட ஆயிரமாயிரம் மக்களின் சோகக் கதைகள் சித்தரிக்கப்பட்டன. இந்தப் படங்களைப் பார்த்த அமெரிக்க மக்கள் ஈதர்லியைக் கண்டபோதெல்லாம் ‘இவன்தான் அந்தக் கொடியவன்’ என்று சுட்டு விரல் நீட்டி அவனைக் குற்றவாளியாக்கிக் கொண்டேயிருந்தார்கள். அவன் இதயம் குழம்பியது. பட்டாளத்து வீரர்களிடம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தான். அவனுக்குக் கிடைக்க விருந்த உயர்ந்த பதவி பறிபோயிற்று. என்றாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒன்று மறியாத மக்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்ததற்கு இதுவும் பரிகாரமாகத் தெரியவில்லை. அவன் தெருக்கிளிலே பிரசாரம் செய்தபோது தான் அரசாங்கம் விழித்தது. ஈதர்லி அணுகுண்டை எதிர்த்துப் பிரசாரம் செய்வது அன்றைய நிலையில் ஆபத்தாகத் தென்பட்டது. ஆனால் அவன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?ஒரு நாள் தனது இல்லத்தின் முன்பே நரம்பொன்றை அறுத்துக் கொண்டு ஈதர்லி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். ஆம்! இந்த உலகத்திலிருந்தே விடை பெற விரும்பி தற்கொலை செய்து கொள்ள முயன்றான். ஆனால் அவனுக்கு டாக்டர்கள் ‘உயிர்ப்பிச்சை’ அளித்து விட்டார்கள்! அவன் மருத்துவமனையில் நினைவு பெற்று எழுந்தபோது, ‘ஐயோ! நான் இன்னும் உயிருடனா இருக்கிறேன்?’ என்று அலறினான். மாதங்கள் சில மறைந்தன. ஊரும் உலகமும் அவனைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திய நிலைமை மாறி, ஒவ்வொரு நிமிடமும் அவனது உள்ளமே அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது அதிகாரிகளுக்குப் புரிந்து விட்டது. ஈதர்லி பயித்தியக்கார ஆசுபத்திரிக்கு அனுப்பப்பட்டான். அங்கும் அரைப் பயித்தியங்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டு விட்டன. ஒரு நாள் திடீரென்று ஈதர்லி பயித்தியக்கார விடுதியிலிருந்து மறைந்துவிட்டான். பயித்தியக்கார விடுதியிலிருப்பதை விட சிறையில் இருப்பதே தனக்குச் சரியான தண்டனையாக இருக்க முடியும் என்று எண்ணினான். ஓர் இடத்தில் திருடினான். ஆனால் அவன் எண்ணம் ஈடேறவில்லை. மீண்டும் பயித்தியக் கார விடுதிக்கே அனுப்பப்பட்டான்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ‘அவனுக்குப் பயித்தியம் தெளிந்து விட்டது’ என்று டாக்டர்கள் அவனை வெளியே அனுப்பியபோது....

மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன், கல்வஸ்டன் என்ற இடத்தில் ஒரு கடையைக் கொள்ளை அடித்தான். அவன் கொள்ளையடித்தது 162 டாலர்கள் தான்! அவன் எண்ணம் ஈடேறி விட்டது. இன்றும் ஈதர்லி சிறையில் இருக்கிறான். அவனோடு அணுகுண்டு வீசச் சென்ற டிப்பெட் உட்பட நால்வர் இன்று அமெரிக்க ராணுவத்தில் உயர்ந்த பதவியில் உட்கார்த்திருக்கிறார்கள். ஆனால் ஈதர்லி தனக்குரிய உயர்ந்த பதவியைச் சிறைச்சாலையிலே தேடிக் கொண்டு விட்டான்! ஈதர்லிக்கு இன்று சிறைச்சாலை ஓரளவுக்கு மனச் சாந்தியைத் தரலாம். ஆனால் என்றைக்குமே ஈதர்லியைப் போன்றவர்களை உலகம் மன்னிக்காது. தான் செய்த மன்னிக்க முடியாத பாவத்தை ஈதர்லியின் உள்ளம் இன்று ஒப்புக் கொள்ளலாம்; வருந்தலாம். ஆனால் இன்றைக்கும் ஜப்பானிலே அணுக் கதிர் வீச்சால் அவதிப்படுகின்ற ஆயிரமாயிரம் மக்கள் என்றைக்குமே அவனை மன்னிக்க மாட்டார்கள். ஆனால் ஒன்று! அவனுக்கே இந்த நிலையென்றால், நெறி தவறிப்போர் வெறியில் நிலை தடுமாறி படை கொண்டுவரும் பாவக் கரங்களுக்கு...?

- சோலை

(07.11.1965 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)