உத்தரப்பிரதேசம்: ஒரே வாரத்தில் இரு பெண்கள் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பம்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Published:Updated:
ரேணுகா, விகாஸ், ஜுதிகா
ரேணுகா, விகாஸ், ஜுதிகா
0Comments
Share

உத்தரப்பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணுகா குமார் தற்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். அவர் சிறுபான்மை நலத்துறையில் செயலாளராக இருந்தார். அவரைக் கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய அரசு மீண்டும் உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மீண்டும் உத்தரப்பிரதேசத்துக்குச் செல்ல விரும்பாமல் தனது ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வுக் கடிதத்தை உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு அனுப்பியிருக்கிறார். ரேணுகா அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் முறைப்படி ஓய்வு பெற வேண்டும். 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ரேணுகா 1990-களில் உத்தரப்பிரதேசத்தில் ஊழல் செய்த அதிகாரிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர்.

இதே போன்று ஜுதிகா பதன்கர் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் ஆளுநராக இருந்த ராம் நாயக்குக்கு முதன்மைச் செயலாளராக இருந்தார். தற்போது மத்தியப் பணியில் இருக்கிறார்.

ரேணுகா, விகாஸ், ஜுதிகா
ரேணுகா, விகாஸ், ஜுதிகா

இவர் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால் இப்போதே விருப்ப ஓய்வு திட்டத்துக்குக் கடிதம் கொடுத்துவிட்டார். மற்றோர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான விகாஸ் கோதல்வால் என்பவர் தற்போது படிப்பு விடுமுறையில் இங்கிலாந்தில் இருக்கிறார். இவரும் தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி தனக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். மூவரும் மாநிலத் தலைமைச் செயலாளர் துர்கா சங்கருக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கின்றனர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

ஒரே நேரத்தில் அதுவும் ஒரு வாரத்துக்குள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூன்று பேர் விருப்ப ஓய்வு கேட்டிருப்பது மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பணியாற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விரும்பாமல் இருப்பதற்கு... சில அதிகாரிகள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.